வியாழன், 24 டிசம்பர், 2009

துயர்கொண்ட பாடல்


இன்னும் மீட்டப்படாமல்
புல்லாங்குழலில் பதுங்கிய இசையாய்
என்னுள் நிரம்பியிருக்கும் அன்பே
கடைசியாக
கடல் கொண்ட தனிமையை பரிசளித்தாய்
கன்னங்களில் வழிந்தோடும் நீரைத் துடைக்கும் பொருட்டு
நீ என்னை ஆட்சிசெய்தாய்
வாசனைகளால் நிரம்பி வழிந்த சொற்கள்
மயக்கமூட்டுகின்றன
இரவும் பகலும் தீய்ந்து பொசுங்குகின்றன
காலம் வெளி மறந்து மங்குகின்றன நினைவுகள்
தடித்த முத்தங்களால்
புண்ணாகிப்போன உதடுகள்
கேலி செய்கின்றன
மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள்
வாழ்வின் தீராத் துயரங்கள்
அன்பின் நிழலுருவம்
கண்ணிமைகளில் தொக்கி நிற்கிறது
தூரங்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன
நடக்க மறுக்கும் கால்கள்
அமைதியை விரும்புகிறது இதயம்
எல்லாவற்றிர்க்கும் மேலே
நானே எழுதிய
துயர்கொண்ட நீண்ட பாடல் வரிகள் அயர்ச்சியூட்டுகின்றன.

புதன், 23 டிசம்பர், 2009

அறையில் மரித்த பட்டாம்பூச்சி


நிலையின்றி விடாமல் பறந்துகொண்டிருந்த
வழிதவறிய பட்டாம்பூச்சி
என் அறைக்குள் வீழ்ந்து மரித்தது
சந்தனம், கறுப்பு, வெள்ளை,பழுப்பு வண்ணங்களில்
பளபளத்த அதன் இறக்கைகள்
சோர்ந்து துவண்டிருந்தன
பட்டாம்பூச்சி வாழ உவந்ததாக இல்லை
பெருநகரத்தின் நிலம்
எங்கிருந்து வந்தது அம்மாவின் அதிசயமான கேள்வி
பட்டாம்பூச்சி அழுத்தமாக உச்சரித்து
வீட்டுக்கு வந்தால் நல்லது என்பார்கள் என்றது
ஆனால் இறந்த பட்டாம்பூச்சி
அம்மாவின் கவலை
இறந்த பட்டாம்பூச்சியை என்ன செய்ய அம்மா
புதைத்துவிடு மகனே என்றேன்
இடம் தேடி அலைந்தான் மகன்
கான்கிரிட் கட்டிடங்களின் சிமெண்ட் தளங்கள்
அவனைச் சோர்வடையச் செய்தன
கடைசியாக என் புத்தகம் ஒன்றில் பத்திரப்படுத்தினான்
புத்தகத்தின் வரிகள் திருத்தி எழுதப்பட்டன
பட்டாம்பூச்சி பற்றி
மகன் எழுதிய சிறந்த கவிதை.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

பிரபஞ்சத்தை நிறைக்கும் உடல்


என் கருந்தசைகளை
தின்ன ஆசைப்பட்டபோது
உன் காதலைச் சொன்னாய்
மாமிச பட்சியின்
ஒளிர்ந்த கண்கள்
கிளர்ச்சியூட்டியது
இதயத்தில் அல்லாது
மூளையில் உன்னை அமர்த்திக்கொண்டேன்
குற்றவுணர்வில்லையே என்றபடி
லிங்கத்தை கூர்மையாக்கி
என் துயரினில் செருகினாய்
அதிர்ந்தது உடல்
கீற்றைப்போல் கூட
அன்பு ஒளிந்திருக்கவில்லை அதில்
துக்கத்தை முழுமையாக்கினாய்
என் உடலை காகங்களுக்கு
தின்னக் கொடுத்தேன்
மாமிச வாடை
பிரபஞ்சத்தை நிறைக்கிறது.


2

மென் சொற்களில் துவங்கியது
வன் சொற்களில் முடிகிறது .
விலங்குகளின் உருமல்களோடு
தவித்தலைந்து வன்மம் கொண்டிருக்கிறது
பாவிகளின் ஆன்மா .
வெளிகளில் மிதக்கும் என் புன்னகையில்
ஒளிந்திருக்கிறது
அவர்களுக்கான நேசம் .

திங்கள், 14 டிசம்பர், 2009

பெருமழைக் காலம்


நகரம் பெருமழையாய் காட்சியளித்தது
அவனுக்காக
மரமல்லிப்பூக்கள் உதிரும் சாலையில்
வெகுநேரம் காத்திருந்தாள்
அவள் கண்களில் துளிர்த்த கண்ணீர்
நகரை மூழ்கடித்தது
எப்படியும் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில்
தன்னை அடைவான் என்றிருந்தாள்
தன் சுவடுகளை அருவமற்று அழித்து
அவன் பாலையில் குடியேறியதாகச் சொன்னான்
மழைக்கோட்டணிந்த வழிப்போக்கன் ஒருவன்.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

ப்ரியமானவர்களின் தேவதை...


பெருநீலக் கரையில்
தனித்து அலைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும்
மண்கோர்த்த சிப்பிகளில் சேகரிப்படுகிறது
அதை திறக்கும் சிறுமி உலகின் தனிமையின் தேவதை ஆகிறாள்
சொற்களைப் பிரித்து பிரபஞ்சம் முழுக்க விசிறி எறிகிறாள்
அது உங்கள் ப்ரியமானவர்களையும் சென்றடையலாம்

வியாழன், 10 டிசம்பர், 2009

வெளியேறும் பட்டாம்பூச்சிகள்


நீலமலர்கள் ஆற்றங்கரையில் விரவிக்கிடந்த
ஒளிநிரம்பிய மழைநாளில்
மலர்வாசனையில்
மயங்கிக் கிடந்தன
கனவில் கண்ட பட்டாம்பூச்சிகள்
இறக்கை மூடாத அவைகளை
எனது வலது கையில்
வண்ணங்களாய் மலரச் செய்தேன்
ஆற்றின் ஒளிநிரம்பிய நீரைப்பிடித்து
என் கைகளில் ஊற்றி
ஒளிநீரைக் குடி என்றாய்
என் உடலில் பெருகியது ஒளிவெள்ளம்
கையிலிருந்த பட்டாம்பூச்சிகள்
திசையற்றுப் பறந்துபோயின
அன்றிரவு ஒளிநிரம்பியநீர்
சூடாக வெளியேறியது
கொல்லையில் அமர்ந்திருந்த
பலவண்ணப் பட்டாம்பூச்சிகள்
என்னை பார்த்துச் சிரித்தன
வெறுமை.

புதன், 9 டிசம்பர், 2009

மறப்பதற்க்கு...


சரி எல்லாவற்றையும் வெறுங்கள் பரவாயில்லை
துக்கமாய் இருங்கள்
நீங்களே உங்களை வன்கத்தியால்
இருதயத் தசையில் சொருகிக்கொள்ளுங்கள்
கவலை தரும் அவர்களை மறக்க முடியுமென்றால்

சொற்களின் நிரம்பாதவன்


சிரமமின்றி வெகு இயல்பாய் சேர்த்துச் செய்வான் வார்த்தைகளை
முதன் முதலாய் கடல் பார்த்த குதூகலத்துடன்
நெம்பி வழியும் அது
உப்புக்கரிக்கும்நீர் காயம் படிந்த தசைகளில் தெறிக்கும்
ஆனந்தம் அதில்
விரும்பிச் சேரும் மீன்கள்
சிக்கலின்றி பின்னலிடப்பட்ட வலையில்
உன்னைவிட
ஒருமாற்று குறைந்த அன்பே என்னுடையது என்று
சொற்கள் உண்மையை விளம்பும்
ஆகா! என்ன ஒப்புதல் வாக்குமூலம்
குற்றங்களே ஆனாலும்
மனம் ஆராதிக்கும்
இவனே சரியென்று...
இடப்பட்ட சொற்கள் எல்லாம்
ஒருநாள் மௌனங்களால் வெளியேற்றப்படும்
அலைகழியும் மனதுடன்
நிறைய சொற்களுடன்
அவனைப் பிராத்தித்தால்
சொற்களில் நிரம்பாதவன் நான் என்பான்
கவனம்.

செவ்வாய், 8 டிசம்பர், 2009

திரும்பி வராதவனின்.....


உன்னை நான் அடையாளம் காணாத
அந்த முதல் தருணத்தில்
கடும் தேனீர் சாப்பிட்டபடி
ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்த
என்னை யாரென்று கவனித்து கேட்டேன்
என்றாய் பின்னாளில்.
அங்கேயே பெரும்நகரம் நடுங்க
அன்பின் கருத்தை உன் வார்த்தையால் கொடுங்கத்தியாக்கி
கூட்டத்தில் செருகினாய்
என் வன்மம் தூண்டி
அன்று நான் புறக்கணிக்கும் எதிரியானாய்
மற்றொரு சந்திப்பில்
உன்னைக் கடந்து சென்ற போதும்
பாவங்களின் பாவி என்றே கருக்கொண்டேன்
பிரிதொருநாளில்
என் நண்பர்களுடன் நீ நிற்கையில்
எதிர்பாராமல் உன்னிடம் பேச வாய்த்தபோது
நீ சிறந்த கவிஞன் என்றேன்
சொல்லிவிட்டு என் வாகனத்தை திருப்பினால்
மரணம் மிக அருகில் நின்றது
உயிர் எழுப்பும் ஒசையைப்போல
பார்த்து போங்க உன் தாய்மையின் குரல்
அன்பின் பெருத்த விழிகளால் நான் திரும்பிப் பார்த்தேன்
இனி எல்லாம் நிகழும் என்பதை
உன் நண்பனும் என் தோழியும் அறிந்தே வைத்திருந்தார்கள்
நாம் இப்போது இல்லாமல் இருப்பதையும்.

திங்கள், 7 டிசம்பர், 2009

அப்பாவோடு மடிந்த கடவுள்


ஏசு முள்கீரிடம் சூட்டி
சோகமாகக் காட்சியளித்த
நகரத்தின் பெருங்கட்டடத்திற்கு
அப்பாவை முதலில் அழைத்துச் சென்றேன்

அன்றிரவு தூக்கத்தில்
தாதியை அழைத்து
பிதாமகனின் முள்கிரிடத்தை அகற்றி
மருந்திடச் சொன்னார்

அவர் கடவுளப்பா
தானே உயிர்த்தெழுவார்
என்றேன்

தலையசைத்து சமாதானம் அடைந்தார்
மறுநாள்
கடவுள் தன்னருகே
படுத்துறங்கியதாகச் சொன்னார்
எலும்பை உருக்கும்
வலி மட்டும் நீள்வதாகச் சொன்னவர்
கடவுளும் கொடூர வலியின்
உச்சத்தை அடைந்திருப்பார் என்றார்

அப்பா தூங்குங்கள்
இசையை முடுக்கினேன்
தலையை வருடினேன்
தூங்கிப்போனார்

உறக்கச் சடவில்
பாவம் கடவுள்
அவர் இறக்கும் தறுவாயில்
இசையை கேட்டிருப்பாரா
யாராவது அவர்மீது
முத்தங்களை பதித்தனராவென முனங்கினார்

அப்பா
அவர் கடவுளப்பா
தானே உயிர்த்தெழுவார்
என்றேன்

அவருக்கும் வலித்திருக்கும் இல்லையா
என்ற அப்பா
தன் சிரசின் வழியே வெளியேறி
மூடிய கதவை திறவாமல்
இவ்வுலகை மறுதலித்துச் செல்லும்போது
கடவுள் அவர் தோளில் அமர்ந்திருந்தார்.

(உயிர் எழுத்து இதழில் டிசம்பர் 2009 ல் வெளியான எனது கவிதை)

சனி, 5 டிசம்பர், 2009

கனவுகளை வரையாதே அம்மா


பருத்தி பூ போட்ட சட்டையணிந்து
மண்குதிரை ஏறி பறக்கிறாய் மகளே
என் கனவில் என்றேன்
நான் பால்யம் அற்றவள் அம்மா
நிறங்களில் வழியும் உன் கனவுகள் பொய்யானவை
ஏன் அம்மா என் கனவுகளை
நீ கண்டுகொண்டிருக்கிறாய்
கருப்பு வெள்ளைகளால் ஆன அவைகள்
எனக்குச் சொந்தமானவை
கனவுகளில் என் ரெக்கைகளை
வரையாதே அம்மா
இயல்பிலேயே அவை என்னோடிருக்கின்றன
என் விளையாட்டினைப் பூட்டி
உன் அறைக்குள் சுருட்டிக்கொண்டிருக்கிறாய்
உன் தோழமைகள்
எனக்கு பிரிவினைச் சொல்லிக்கொடுக்கிறது
வந்துபோகும் அவைகளை
நான் வெறுக்கிறேன் அம்மா
உன் குழந்தமையும் பால்யமும்
என்னை பொறுமையிழக்கச் செய்கிறது
பொறுத்துக்கொண்டிருக்கிறேன்
உன் விழிகளில் ததும்பும் நீரை சகிக்காமல்
என் பால்யம் நிரம்புவதற்கு முன்பே
ருதுவாகும் நாளை குறித்துக்கொண்டிருக்கிறாய்
உன் குருட்டுத்தனத்தால்
போ அம்மா
கருப்பு வெள்ளையிலான
என் கனவுகளை நானே கண்டுகொள்கிறேன்.

செவ்வாய், 1 டிசம்பர், 2009

விட்டுச் சென்றவனின் நிழல்


நினைவுகள்
அறையில் சுருங்கி
காய்ந்த டீக்கோப்பையின்
கருநிறத்தை மிஞ்சும்

இரவில்
ஆந்தையின் அலறலாய்
ஆதிச் சொற்கள்
கருகி சாம்பலாகும்

புத்தகங்களில்
பூச்சி மேய்ந்து
எச்சங்களை சிதறடிக்கும்

பலநாள்களாய் மாற்றப்படாத
படுக்கை விரிப்பிலிருந்து
கலவியின் தீய்ந்த வாசனை
குற்றவுணர்ச்சியைப் பெருக்கும்

சவலைப்பிள்ளைபோல்
மெல்ல ஊர்ந்து செல்லும் வெயிலாய்
குழந்தையின் குதூகலங்கள்
மௌனத்தில் உறையும்

தனிமையின் நிழல்படிந்த இந்நாள்களில்
அவன் எங்களை கைவிட்டுப் போயிருந்தான்
ஓநாயின் விழிகளை ஒத்த அவனது நிழலை
என் அறையைவிட்டு வெளியேறச் செய்தேன்
அமைதி.

வெள்ளி, 27 நவம்பர், 2009

நீங்காத வனவிலங்கின் தனிமை


நீங்கள் செய்யும்
ஒவ்வொரு காரியத்திலும்
வளர்ப்பு பிராணியாக்கப்பட்ட
நான் உடனிருந்தேன்
வாலாட்ட மட்டுமே
பழக்கப்படுத்தப்பட்ட
என் குரல்வளை
நசுக்கப்பட்டிருந்தன
அது இயல்பென்றிருந்தேன்
உங்களுக்கு கோபம்
வரும்போதெல்லாம்
என்மேல்
சிறுநீர் கழித்தீர்கள்
போதையின் உச்சத்தில்
என் மேல் காரி உமிழ்ந்தீர்கள்
குருட்டு பிச்சைக்காரியைப்போல்
திசையற்று பார்த்து
துடைத்துக்கொண்டேன்
எல்லாம் அன்பின் மிகுதியால்
நிகழ்த்தப்படுகிறது
என்றே கட்டமைக்கப்பட்டிருந்தேன்
கடைசியாக
உங்களுக்கு நன்றி செலுத்திய
என் வாலை நறுக்க முற்பட்டபோது
எனக்கு கூர்பற்கள்
இருப்பதை மறந்துவிட்டிர்கள்

உயிர்வழி


என் ஆன்மாவின்
நிகறற்ற அன்பே
உன் காலடியில் வைப்பதற்கு
ரேகை படர்ந்த உள்ளங்கையின் வெம்மை
எப்பவும் துளிர்ப்புடனே இருக்கும்
என் உயிர்வழி கசியும் மூச்சு
உன் இதயத் தசைகளைப் பிளந்து செல்வதை
நீ எப்படித் தடுக்க முடியும்
உள்ளே அனுமதிப்பதைத் தவிர

வெள்ளி, 20 நவம்பர், 2009

பால்ய வனம்


ஒளிஇருள் வெள்ளமாய்
நீந்தின
என் பால்யத்தின்
சூட்டில்.
பிறந்த மேனியாய்
பாதாளம் சுருங்கும்
இடிச்சிரிப்பில்
வனாந்தரத்தின் தனிமையை நிறைத்தேன்
கணங்கள் நொடிந்தன
பூக்கள் வெடித்து
மகரந்தம் பரப்பியது
அருவியின் மோனநிலை
குலைந்து
பலதிசைகளிலும்
பீறிட்டுச் சிதறியது
சாம்பல் மேகத்திலிருந்து
புற்கள்
காட்டில் இறங்கி
அற்ப ஒலியில்
கூச்சலிட்டு மயங்கின
ரீங்காரத்தை
மறந்த வண்டுகள்
பூக்களைப் புணர்ந்தன
ஓடையின் பொன் மணலில்
துயில் கொண்டிருந்த
கூழாங்கற்கள் மேலெழும்பிக் குதித்தது
காட்டின் நிறம் மறைந்தது
நான் பால்யத்தின் வெளியில்
யோனி மறந்தவளாயிருந்தேன்

புதன், 18 நவம்பர், 2009

குறுங்கத்திகளைப் பரிசளித்தவன்




நீ செலுத்திய
அன்பின் ஆயிரம் குறுங்கத்திகளை
உன் கண்முன்னே
பிடுங்கவே உன்னை அழைத்தேன்
வன்முறையின் துர்நாற்றங்கள்
உனக்கு புதிதல்ல
சிரிக்கவே செய்வாய்
நமக்கான கடைசி உரையாடல் இதுவென்று தெரிந்தும்
நீ அமைதியாகவே இருப்பாய்
குருதியை துடைத்தபடி குறுங்கத்திகளை
மௌனமாகவே வாங்கிச் செல்வாய்
உன் குருட்டுப் புன்னகைக்குள்
ஒளிந்திருக்கும் தடம் தெரியாத வார்த்தைகளை
நான் அறிவேன்
அன்பே
உதிராத உன் அன்பினை
ஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது
நீ என்றும் சலிக்காதவன்
அன்பின் ஆகுருதியில் செலுத்த
விஷம் தோய்ந்த அம்புகளை தயாராகவே வைத்திருப்பாய்
அன்பின் ஓட்டைகளை அடைப்பது
எப்படி என்பதை
உன்னிடமிருந்தே பழகிகொண்டேணடா
சிதறிய ரத்தத் துளிகளை சேமித்துச் செல்
அவையற்று பின்தொடராது
உன் நிழலின் நாய்க்குட்டி

ஞாயிறு, 15 நவம்பர், 2009

வாழ்வின் ருசி


வெகுநேரமாய்
தனிமையின் சோகை பிடித்த
ரயில் நிலையத்தில்
விசிலுடன் காத்திருந்தான்
கெண்டைக்காலுக்குமேல்
சேலை உயர்ந்து
கறுத்த கொலுசின்
ஒலியில்
நடந்து வருவது
தாமரைதான்
வயிறு புரண்டு வலித்தது
தோளில் படுத்திருந்த
குழந்தை
அவள் சாயலிலே இருந்தது
பால்ய சாயல்
காணாமல் போயிருந்த அவனைக்
கடந்து போனாள் காற்றைப்போல.
கையில் இரண்டு பைகளைச் சுமந்திருந்தாலும்
ஓடிப்போய்
அவள் கையிலிருந்த பையைவாங்கி
தன் கைக்குள் திணித்துக்கொண்டவன்
அவள் பின்னாலிருந்து
புன்னகை வழிய
குழந்தையைக் கொஞ்சியபடி போனான்
நல்லவிதமாய்த்தான் இருக்கிறது
வாழ்க்கை

ஞாயிறு, 8 நவம்பர், 2009

என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகள்



என் உள்ளங்கையில் பரந்து விரிந்து
நாடி நரம்பெங்கும் கிளைபிரிந்து
குருதி வெள்ளமாக
பாய்கிறது
உன் அன்பின் நெடிய வாசனை
கொதி அமிலமாய்
அன்பை என் முகத்தில் பீய்ச்சியடிக்கிறாய்
நாறி சீழ்வடியும் நீரை
என் வலியோடு சேர்த்துக் குடிக்கிறாய்
உலகின் உன்மத்தம் இதுவென்று
நாட்டியமாடுகிறாய்
ஆனால்
ஈரம் கசியும் என் புண்களில்
உன்னால் ஒருநாளும்
கனிந்த முத்தத்தைக் கொடுக்க முடியாது
லட்சம் சிறகுகள் கொண்ட உடலை குறுக்கி
என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகளை
பொதிந்து வைத்திருக்கிறேன்
அதிகாரத்தின் அன்பை
அவை
ஏளனத்தோடு பார்த்துச் சிரிக்கும்
அவ்வளவே
அதன்முன் மண்டியிட்டு உன்னால்
தோற்றுப்போகவே முடியும்.

சனி, 24 அக்டோபர், 2009

நினைவுப் புழுக்கள்




உன் மௌனத்தின் லட்சம் புழுக்கள்
என் மூளையில் பாறையாய் இறுக்கி
ஞாபகத்தை அழிக்கிறது
பிரிதொரு கணத்தில்
புழுக்கள் இடையறாது ஊறி
அதில் பல லட்சம் நினைவுகள்
தொடர்பின்றி தோன்றி
மூளையை சிதறடித்து
கண் காது மூக்கு வழியே
வேகத்துடன் வெளியேறும் போது
நினைவில் உயிர் பிரிவதை உணரமுடிகிறது
ஆன்மாக்கள் பற்றி எரியும் நம் உறவில்
பகிர்ந்துகொள்வதற்கு
அழுகிய முத்தங்களே உள்ளன
என்பதை அறிவேன்
இருந்தும் பிரிவின் வலியை
பாதத்தின் நடுநரம்பு
சுண்டியிழுத்து உணர்த்துவதை
விரும்பவே செய்கிறேன்.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

கருத்துக்களின் புதிய ஊடகம் வலைப்பூ




புத்தங்களை விட உட்கார்ந்த இடத்தில் பலவிதமான செய்திகளை படைப்புகளை வலைப்பூக்களில் படிப்பது மிக எளிமையாக போய்விட்டது. ஒரு சில பத்திரிக்கைகளே புதிய படைப்பாளிகளை ஏற்றுக்கொண்டு படைப்புகளை வெளியிடுகிறது. இதனால் நல்ல படைப்பாளிகள் வெளியே தெரிவதற்கு கொஞ்ச நாளாகலாம்.ஆனால் இப்போதெல்லாம் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு இல்லை. வலைப்பூக்கள் பிரபலமாகிவிட்டதன் மூலம் ஒவ்வொரு வாசகனும் எழுத்தாளராக ஆகலாம். புத்தகங்கள் படிப்பதற்கு நிகராக வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். பல வலைப்பூக்களில் பிரமிக்கும் வகையில் படைப்புகளை காணமுடிகிறது. அரசியல் அதன் எதிர்வினைகள் என்று மிக தைரியமாக எல்லா விசயங்களையும் எவ்வித சமரசம் இன்றி அலசி ஆராயிறார்கள்(அவை சண்டைகளாக இருந்தாலும்). கருத்துச் சுதந்திரத்தின் பெட்டகமாக இருக்கிறது வலைப்பூ.பல்வேறுவிதமான எதிர்க்கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக ஈழத்தமிழர்கள் உலக அளவில் தங்களுடைய அரசியல் மற்றும் அழிக்கப்பட்ட, அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் கொடுமையான நிலையை எடுத்துச் சொல்ல வலைப்பூ மிகச் சிறந்த ஊடமாக விளங்குகிறது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் கருவியாக அவர்கள் வலைப்பூக்களை பயன்படுத்துவது மிகச் சிறந்த சமூக விஞ்ஞான வளர்ச்சி. புதிதாக நேற்று தொடங்கிய வலைப்பூ ‘குப்பைத் தொட்டி’ http://aghambrahmashmi.blogspot.com/2009/10/blog-post.html
முதல் எனக்குப் பிடித்த வலைப்பூக்கள்.

http://tamilnathy.blogspot.com/2009/10/blog-post.html
http://kuzhali.blogspot.com/2009/03/blog-post_21.html
http://aghambrahmashmi.blogspot.com/2009/10/blog-post.html
http://umashakthi.blogspot.com/
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=482
http://www.makalneya.blogspot.com/
http://www.adhiran.blogspot.com/
http://poetry-tuesday.blogspot.com/
http://chaithiraboomi.blogspot.com/2009/10/blog-post_21.html

திங்கள், 19 அக்டோபர், 2009

கொலைகள் பெருகும் அன்பு




வெளிச்சத்தில் பெருகும் பூச்சிகளாய்
துரோகம் என்மீது
இடைவெளியற்று அப்புகிறது
விலக விலக
ஆழிநீரைப்போல் உயர்ந்தெழுந்து துரத்தி
முழுமையாக மூழ்கடிக்கிறது
நானே துரோகத்தின் குரலாய் மாறும்போது
கண்கூசும் ஒளியாய்
அன்பை அணுஅணுவாக உதிர்க்கிறது
மிதக்கும் ஒளியை கையில் பிடித்தால்
பின் நிதானமாக
குரல்வளை அறுத்து
நிகழ்த்தப்படுகிறது ஒரு கொலை.

2

எதற்கும் மாற்று இல்லை நான்
எதற்கும் மாற்று இல்லை நீ
இருந்தும் ஒன்றின்
வேறொன்றாய்த்தான் இருக்கிறோம்.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

பெருத்த துரோகம்


அன்புடன் என்னை முத்தங்களால் ஆரத்தழுவி
நான் அருமையான துரோகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்
எப்போதும் போதையேற்றிக் கொண்டிருக்கும்
அவன் துரோகத்தின் மீது ஒரு குஷ்டரோகியின்
ஆழ்ந்த கனிவை ஆழப்பதிந்தேன்
எச்சிலை கவனமாய் துடைத்தவனின் கண்களைக் கவனித்தேன்.
நிழலைப் போல படர்ந்திருந்த துரோகத்தை
வழியும் உதிரமாகக் காட்சிபடுத்தினான்.
அவன் உண்மையின் குரூரத்தின் மீது
என் பொய்யின் அறுவெறுப்பு
பெரும் அச்சக் குரலாக மாறி
துரோகத்தை இறுக்கப் பற்றியது
உண்மையின் அன்பையும்
பொய்யின் வன்மத்தையும்
பெருத்த துரோகமாக்கி
ஒரு குடுவையில் ஏந்தி
இருவரும் பருகினோம்.

புதன், 14 அக்டோபர், 2009

அன்பின் மரணம்


அப்பாவின் சுருக்கமற்ற
முதுகுத் தசையின் அணுக்களில்
மரணம் தன் அன்பின் முத்தங்களை
மெதுவாக பாய்ச்சியிருக்கிறது
கடுமையானதும் ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளமுடியாத
அம்முத்தங்களை என் மென்விரல்களால்
அழுந்தத் துடைக்கிறேன்
மரணத்தின் வாசனை என்னை
மூர்ச்சையாக்கி தூரத்தள்ளி சங்கிலியிடுகிறது
அது வீரியம் கொண்டு
உயிரின் தசைநார்களை கிழித்துபடி
மிகப்பலம் கொண்ட எதிரியைத் தாக்குவது
போல் வாள்வீச்சுடன் காற்றை கிழித்தபடி
அப்பாவின் முன் அதிர்ந்து நிற்கிறது
பின் மண்டியிட்டு
உயிரைக் கொடுத்துவிடு
என்று பிச்சை கேட்கிறது.

சனி, 3 அக்டோபர், 2009

ஷோபா என்றொரு தேவதை



ஊசி முனையில் கருந்தட்டுகள் சுழல,காற்றின் தேகமெங்கும் இசை பதிந்த காலமது.நம் விருப்பங்கள் தாண்டி,நம் அனுமதியற்று,நமக்குள் வந்தமரும் கலை.. இசை. என்னுள்ளும் இசை இப்படித்தான் வந்து சிம்மாசனமிட்டது. எங்கள் ஊர் ஒரு மலை கிராமம். மூன்று புறமும் மேற்குத் தொடர்ச்சி மலை அரண் அமைத்து இருக்கும் கூடலூர். அந்த ஊரில் இசையற்ற பொழுதுகளோ, காலங்களோ இல்லை.அது விசேசங்களின் ஊர்.. சடங்கு, காது குத்து, மொட்டை, மொய்விருந்து, மார்க் கல்யாணம், கிடா வெட்டு,..இப்படி ஏதாவது ஒரு விசேசம் நடந்துகிட்டே இருக்கும்.. எங்க வீட்டிலேயே இரண்டு வருசத்திற்கு ஒரு முறை விசேசம் நடக்கும். அந்த நேரங்களில் கரும் இசைத்தட்டுகள் சுழலுவதை பக்கத்திலிருந்து அதிசய பொருளைப் போல பார்ப்பேன். மைக் செட் போடுபவர் எனக்கு இசைக் கலைஞனாகத் தெரிவார். இவர் எப்படி இதில் பாட்டை வரவைக்கிறார் என்று வியப்பில் ‘எப்படிண்ணே இதுல பாட்டு வருது’ என்று கேட்பேன். ‘இந்த தட்டுல ஊசியை வச்சா பாட்டு வரும் அதை எடுத்துட்டுடா பாட்டு நின்னுடும்’ என்று ‘இங்கேயெல்லாம் வரக்கூடாது செட் கெட்டுப்போகும் ஓடிப்போ’ என்பார்.

ஊரில் திரும்பும் திசைகளெங்கும் கூம்புக் குழாய்கள்(loud speakers) ஏதோ ஒரு பாட்டை இசைத்துக் கொண்டிருக்கும். சிலசமயங்களில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் பாடல்கள் ஒலிபரபப்பாவதும் உண்டு. ' தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா' என ஒன்று கேள்வி கேட்கும்,மற்றொன்று ‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி’ என பதில் சொல்லும்.இப்படித்தான் என் பால்யங்கள் பாடல்களால் நிரப்பப்பட்டது. என்னைத் துயில் கொள்ளச் செய்வதும் ,என்னைத் துயில் எழுப்புவதும் ஏதோ ஒரு பாடலாய் இருக்கும். வெறும் பாடல்கள் என்ற நிலையிலிருந்து பாடல்கள் என்னை பித்துக்கொள்ளச் செய்தன. இளையராஜாவின் இன்னிசை பாடல்கள் என்று மைக் செட்காரர்கள் அறிமுகம் செய்து பாடல்களை ஒலிபரப்பினார்கள். பின் அந்தப் பெயர் மந்திரச் சொல் ஆனது. அது என் பாவாடை சட்டை காலம்.

சூரியன் மறையும் நேரம் அநேகமாய் எங்களூர் வானம் செந்நிறமாய் இருக்கும்.செவ்வானம் பார்த்தபடியே பாடல்கள் கேட்பது ஒரு சுகம். அப்படி பாடல்கள் கேட்கும் நேரத்தில் நானே செந்நிறமாக மாறி வானத்தில் மிதப்பது போன்ற உணர்வை இளையராஜாவின் பாடல்கள் ஏற்படுத்தின. அந்த காலக்கட்டங்களில் நான் என்னையே ஒரு கரும் இசைத்தட்டாகத்தான் உணர்ந்தேன். விழித்திருக்கும் கணங்களிலெல்லாம் என் உதடுகள் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்தபடி இருக்கும் அல்லது என் மனதிற்குள் ஏதோ ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.என் உடலுக்குள்ளும், மனதுக்குள்ளும் திரையிசைப் பாடல்கள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்தது. அது என் படிப்பினை பாதிக்கவில்லை. இசை மனது எல்லா நல்ல விசயங்களையும் அழகாக உள்வாங்கியது. வகுப்பில் முதல் ஐந்து ரேங்க்குள் வாங்கினேன்.

பாடல்கள் என் ஆடை

பாடல்கள் என் அணிகலன்

பாடல்கள் என் உலகம்

என வாழ்ந்த காலம் அது.
எல்லா பாடல்களும் ஒரு சிறகு முளைத்த பறவைபோல வானத்தில் மிதந்து கொண்டிருப்பதாகத் தோன்றும்.பறக்கும் பறவைகளைப் பார்த்தபடியே பாடல்கள் கேட்டிருக்கிறீங்களா? சிறகசைக்காமல் தாளப் பறக்கும் பறவை 'பருவமே புதிய பாடல் பாடு’ என்று பாடியபடிப் பறப்பதாகத் தோன்றும். என் கற்பிதங்களும், என்னைச் சுற்றி இருந்த இயற்கையும் எல்லா பாடல்களுக்கும் ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தது. பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியெங்கும் பாடல்கள் ஒரு வழித்துணையாக வரும்.என் வீட்டிலிருந்து எங்கள் பள்ளிக்கூடம் இருக்கும் தூரம் இரண்டு பாட்டு கேட்கும் தூரம். நல்ல பாடல் என்றால் மூன்று பாடல் கேட்கும் தூரம். நினைத்தபோது மழை வரும் இயற்கைச் சூழல் உள்ள ஊர்(இப்போது வானிலை எல்லாம் மாறிப்போய்விட்டது). அதற்கு கால நேரமெல்லாம் கிடையாது பள்ளிக்குச் சென்று திரும்பும் பலசமயங்களில் எதிர்பாராமல் ஒரு திடீர் மழையைச் சந்திப்போம். அப்போதும் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். குடைகளற்ற அந்த பொழுதுகளில் மழையில் நனைந்தபடியே பாட்டு கேட்டுக் கொண்டே வருவேன்.

மழையில் நனைந்தபடி கேட்கும் பாடல்கள் இனிமையுடன், அந்த மழையோடு என்னைக் கரைத்துவிடுவதாக இருக்கும். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையின் பூங்கோதையின் மனம்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடலை முதல் முறையாக கேட்டபோது மழையில் நனைந்தபடிதான் கேட்டேன். அது பள்ளியிலிருந்து திரும்பும் ஒரு மாலைப் பொழுது. அன்று கருஞ் சாம்பல் வண்ணத்தில் இருந்தது வானம். உதடுகளில் மழை வழிய நானும் அந்தப் பாடலை பாடியபடி வீடு வந்து சேர்ந்த ஞாபகத்தை, இன்றும் எல்லா மழைப் பொழுதுகளும் கிளர்த்துகிறது.

நான் என் சக வயது தோழிகள் போல் இல்லை என்பதில் என் குடும்பம் அநேக கவலை கொண்டிருந்தது. ஆனால் என் படிப்பு சிறப்பாக இருந்ததால் அவர்களால் என்னை தண்டிக்க முடியவில்லை. இது இல்லாமல் அப்பா ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கி வந்தார். அதிலிருந்து அது என் உடமையாகி விட்டது. அப்பா செய்தி கேட்பதோடு சரி. நான் வீட்டிலிருக்கும் மற்ற நேரங்களில் அது என்னுடனே இருக்கும். அதில் பாடல்கள் ஒலிப்பரப்பாகும் நேரங்களை கணக்கிட்டு அப்போது வெளியே செல்லாமல் பாட்டு கேட்பேன். எல்லா இரவுகளிலும் என் தலைமாட்டிலேயே ரேடியோ ஒலித்துக் கொண்டிருக்கும் அல்லது என்னோடு தூங்கிக் கொண்டிருக்கும். அப்பா காலையில் எடுத்து செய்தியை போடுவார். அவர் மட்டும் நான் பாடல் கேட்பதை தடுத்ததே இல்லை. அம்மா,அக்கா, அண்ணன் எல்லோரும் என்னை பாட்டு பைத்தியம் என்பார்கள். நான் வேலை செய்யாமல் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் நாள்களில் ‘ஒரு நாளைக்காவது இந்த ரேடியாவை போட்டு உடைக்கப் போறேன் என்று அம்மா கத்தும்.

அப்பாவோட புளியமரக் காட்டுக்குப் போகும்போது ‘வேலை முடியறவரைக்கும் இந்த ‘ஊஞ்சல்ல ஆடிகிட்டிரு’ என்று ஒரு கயிற்றில் ஊஞ்சல் கட்டிக் குடுப்பார். எங்க காடு மலைக்குப் பக்கத்தில் இருந்தது. மலைக்கு நடுவில ஊஞ்சல் கட்டி ஏகாந்தமா பாடற சந்தோசத்துக்காகவே நான் அப்பாகூட காட்டுக்குப் போவேன். மலைவாசத்தோடும் பயிர் வாசத்தோடும் பாடல்களை பாடுவது அல்லது பாடல்களில் நினைவுகளில் மூழ்குவது உலகில் இணையற்ற சந்தோசத்தை தந்தது.


எல்லோரும் விளையாட்டும் சிரிப்புமாக இருந்த பல நேரங்களில் எங்கேயோ தூரத்தில் சன்னமாக ஒலிக்கும் பாடலைக் கூட உட்கார்ந்து கவனமாகக் கேட்பேன். நான் எப்போதும் மாய உலகத்தில் மிதப்பதாக தோழிகள் பேசிக்கொண்டார்கள்.

இசை ஒரு அன்பான கலை என்பதை நான் தொடர்ச்சியாக பாடல்கள் கேட்பதன் மூலம் உணர்ந்திருந்தேன். இசை என்னுள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியையும் வலியையும் ஒருசேர ஏற்படுத்தியிருந்தது. நான் எதையோ தேடிக் கொண்டே இருந்தேன். கோடை வெயில் ,குளிர் இரவின் தனிமை ,பனியின் கூதல்,மழைவாசம்,எங்கள் ஊரின் இயற்கை..எனக்குள் வேறெதையோ உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. முட்டையைத் தகர்த்து வெளியே வரத்தவிக்கும் ஒரு பறவைக் குஞ்சின் தவிப்பைப் போலிருந்தது.


ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் கழித்துத் தான் எங்கள் ஊர் திரையரங்கிற்கு வரும் காலகட்டம் அது. அந்தப் படங்கள் வருவதற்கு முன்பே பாடல்கள் எனக்கு மனப்பாடமாக இருக்கும். திரையரங்கில் பாடல் காட்சிகள் வரும் போது அந்தப் பாடல்களைச் சத்தமாக பாடுவதற்காகவே நான் திரைப்படம் பார்க்கச் செல்வேன். ஒரு திரைப்படத்தையே பல முறை பார்த்திருக்கிறேன். எனக்குள்ள சினிமா மோகம் ஏற்பட்டதற்கு காரணமே பாட்டு மேல இருந்த பைத்தியம்தான்.


மழையில் இருளில் அதிகாலையில் செந்நிற மாலையில் நான் கேட்ட பாடலெல்லாம் திரையில எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்க்காகவே நான் சினிமாவுக்குப் போவேன்.ஒரு படத்தையும் விடறதில்ல.டப்பிங் படம் ஓடாத படம் எல்லாத்தையும் பாத்துடுவேன்.

அப்பத்தான் பாட்டு மேல் இருந்த அதிகப்படியான உணர்ச்சி சினிமா மோகமாக மாறியது. பத்து பைசா குடுத்து பிலிம் வாங்கி வீட்ல அப்பா வேட்டியில சினிமா போட்டுக் காட்டியிருக்கிறேன். என்னைப் போல பொண்ணுங்க யாரும் பிலிம் வாங்க மாட்டாங்க. வளையல் பாசி என்று வாங்கிக் கொண்டிருப்பார்கள். என்னைப் பார்த்து சரியான ‘கிறுக்கச்சி’ என்பார்கள். நான் படம் காட்டும் விளையாட்டில் ஆண்பிள்ளைகள்தான் ஆர்வம் காட்டுவார்கள்.

நிறையப் படம் பாத்து படம் பாத்து நல்ல படம் கெட்ட படம் எது என்று பிரிச்சுப் பார்க்கும் ரசனை வந்தது. அப்பவும் எல்லாம் மசாலாப் படங்களையும் பார்க்கும் கட்டாயத்திற்கு ஆளானேன். வீட்டில் மற்றவர்கள் அந்தப் படத்தை விரும்பிப் பார்த்தார்கள். அப்போது சினிமா தவிர வேறு பொழுது போக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். பாலச்சந்தர் ,பாரதிராஜா ,மகேந்திரன், பாலு மகேந்திரா படங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படங்களில் கதாநாயகிகள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லது தன்மேல் திணிக்கப்படும் அதிகாரத்தை எதிர்பவர்களாக இருந்த கதாநாயகிள், உண்மையில் என் இயல்பில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதன் பின் நடிகர் நடிகைகளில் நடிப்பில் என் கவனம் சென்றது.

அப்போது எனக்குள் வந்த தேவதைதான் ஷோபா. ஒரு தீவிர மோகத்தோடு நான் சினிமா பார்த்துக் கொண்டிருந்தாலும் எந்த நடிகர், நடிகையருக்கும் ரசிகையாக இருந்ததில்லை. ஆனால் ஷோபாவை என்னாலே எனக்குள்ள இருந்து பிரிக்க முடியவில்லை. ‘என்னை பாரு என்னை ரசி என்னை நினைச்சுகிட்டே இரு வேற எதுவும் செய்யாதே’ என்று சொன்ன மாதிரி இருந்தது. அத்தனை எளிமையான கதாநாயகியை அதற்கு முன் நான் திரையில் பார்த்ததில்லை. பக்கத்து வீட்டு காலேஜ் படிச்ச அக்கா மாதிரி, இயல்பான வாழ்வில் வரும் அன்பான தங்கை மாதிரி, நான் மாற நினைக்கும் ஒரு நாகரீகப் பெண்ணாக இருந்தார். அதுவரைக்கும் எந்த நடிகையாகவும் என்னை கற்பனை பண்ணிப் பார்க்காத நான் திரையில் வரும் ஷோபாவின் கதாபாத்திரத்தைப் போல் இயல்பில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்..அதுக்கு ஒரு அன்பான காரணம் இருந்தது. ஷோபா தனக்கு கிடைச்ச எல்லா கதாபாத்திரங்களையும் ஒரு நுட்பமான அன்பின் வெளிப்பாட்டை கொண்டு நடித்திருந்தார். இயற்கையையும் அன்பையும் நேசிக்கின்ற ஒரு மனுசிதான் இத்தனை நுட்பமான அன்பை வெளிப்படுத்த முடியும்.

ஷோபாவும் என்னைப்போல் இசையும், மழையும் விருப்பமுடைய பெண்ணாக இருக்க வேண்டும். அவர் தனக்கு விருப்பப்பட்ட பாடல்களைச் சத்தமாக பாடுபவராக இருக்க வேண்டுமென்று விரும்பினேன். கள்ளமில்லாத அந்த சிரிப்புக்குள்ள ஒரு தேடல் தெரிந்தது. மனசுக்குப் பிடிச்ச விஷயங்களில் தன்னைத் திளைத்துக் கொண்டு அதில் கரைந்து போகும் மனம் இருந்தது. ஆனால் அவர் விருப்பங்கள் எதுவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் இருந்த ஷோபா இப்படித்தான் இருந்தார். அந்த முகத்தில் வழிகின்ற சந்தோசத்தை, சிரிப்பை, குழந்தைத்தனத்தை,தேடலை எனக்குள்ளேயும் கொண்டு வர விரும்பினேன்.
வள்ளியா ,இந்துவா நடிச்ச ஷோபாவுக்குள்ள நான் எங்கே இருக்கிறேன் என்று தேடினேன்.

அழியாதகோலங்கள், முள்ளும் மலரும், மூடுபனி, பசி ..இந்தப் படங்களெல்லாம் எனக்கும் ஷோபாவுக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தின படங்கள்.

அழியாத கோலங்கள் படத்தில் வருகின்ற இந்து டீச்சர் படத்தில் வருகின்ற எல்லா கதாபாத்திரங்களின் மேலும் சந்தேகமற்ற அன்பை செலுத்தும் பெண்ணாக இருப்பார். கடைசியில் அந்த ஆத்ம அன்பு அந்த கதாபாத்திரங்களை வாழ்நாளில் கடைசி வரைக்கும் கரைய வைக்கும். அந்தப் படம்தான் அவங்களை எனக்குத் தேவதையா காட்டியது. என்னைப் பொருத்தவரைக்கும் தேவதைகள் அழகானவர்கள் இல்லை. அன்பானவர்கள் .அன்பும் குழந்தைத்தனமும்தான் ஒரு பெண்ணை அழகாக்கும்.

சின்னச்சின்ன பாவனைகள்ல அவங்க காட்டற அக்கறை.ஒரு பாவத்திலயிருந்து இன்னொரு பாவத்துக்கு மாறி இரண்டையும் இயல்பான நடிப்பாக மாற்றி பார்வையாளனுக்கு கொண்டு சேர்த்த நடிகை ஷோபாவாகத்தான் இருக்கும்.

அப்படியொரு காட்சி முள்ளும் மலரும் படத்தில் வரும். மருத்துவமனையிலிருந்து திரும்பி வருகின்ற அண்ணனை(ரஜினி) வீட்டுக்கு தூரத்தில் வரவேற்க ஓடுவார். அண்ணனை பார்த்ததும் முகம் கொள்ளா மகிழ்ச்சியில் கட்டிக் கொள்வார். மெது மெதுவாக காற்றில் அண்ணனின் கை இல்லாத சட்டையை தொட்டும் உணரும் போது அந்த மகிழ்ச்சி கொஞ்ச கொஞ்சமாக இறங்கி தாங்க முடியாத துக்கத்தில் விம்மி அழுவார்.

அதே திரைப்படத்தில் கடைசி காட்சியில் தான் விரும்பும் ஆண், ஒரு வளமான வாழ்க்கை, தனக்காக வரும் ஊர் மக்கள் இவை எல்லாவற்றையும், அண்ணன் கூப்பிட்டதும் உதறித்தள்ளிவிட்டு ஒரு குழந்தையைப் போல் ஓடிவந்து உன்னைத் தவிர
வேறு எதுவும் வேண்டாமென்று சொல்லி அழும் காட்சியைப் பார்த்தால் இன்றும் என் கண்கள் ஈரமாகிவிடும்.

மூடுபனி படத்தில் ஷோபா ஒரு சினிமா தியேட்டருக்கு போகும் காட்சி. அக்காட்சியில் இடைவேளையில் திரையரங்கிற்கு வெளியே வருவார். அப்போது யார் என்று தெரியாத ஹீரோவிடம் விரிந்திருக்கும் கூந்தலை மிக இயல்பாக கொண்டை போட்டபடி மணி என்ன என்று கேட்டுவிட்டு ஒரு திண்டில் உட்காருவார். ஹீரோவைப் போல் இப்படியொரு இயல்பான பெண்ணா என்று நாமும் திண்டாடிப் போவோம். இப்படி அவர் நடித்த படத்தை மிக நுட்பமாக பார்க்கும்படி அவர் என்னை இன்னமும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.

இன்று சினிமாதான் தொழில் ,சினிமாதான் வாழ்க்கை என்றானபின் உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்த பிறகும் ஷோபா எனக்குள் ஏற்படுத்திய பிம்பம் உடையவே இல்லை.

ஒரு தேவதைப் பெண் திடீரென்று விளிம்புநிலை கதாபாத்திரத்தில் நடித்தால், உடனே நாம் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையயோடு ஏற்பது சிரமம். ஒரு பிரியாணிக்காக தன்னை இழப்பது தெரியாமல் இழக்கும் இரு வெகுளிப்பெண்ணாக, பசித்தலையும் குப்பத்து பெண்ணாக அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பார்.


புத்தகங்களை மறுவாசிப்பு செய்வது போன்று அவருடைய திரைப்படங்களை திரும்பப் பார்க்கிறேன். அதே நடித்த படங்களின் பாடல் காட்சிகளையும் திரும்பத் திரும்ப பார்க்கிறேன். இன்று என்னைப் பற்றி, இசை பற்றி, சினிமா பற்றி, ஷோபா பற்றி எழுத முக்கிய காரணம் அவர் நடித்த ‘பூ வண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்’ பாடல் என் பழைய ஞாபங்கங்களை கிளப்பிவிட்டது. இந்தப் பாடல் முழுதும் அன்பால் நிறைந்து இருக்கும். இசையில், குரலில், பாடல் வரிகளில்,ஷோபா நடிப்பில் அன்பு தளும்பி வழியும். அந்தப் பாடலைக் திரும்ப கேட்க கேட்க ஷோபா என் மனதில் ஆழமான அழகான படிமமாக படிந்து போயிருப்பது தெரிந்தது. அவர் நடித்த நான்கு பாடல் காட்சிகளை என் வாழ்க்கையிலிருந்து
பிரிக்க முடியாது. ஒரு முழுநீளத் திரைப்படத்தில் காட்ட வேண்டிய பாவனைகள் அனைத்தையும் ஒரு பாடல் காட்சிக்குள்ளயே செய்து காட்டிடுவார்.

‘பூவண்ணம் வண்ணம்’ பாடல் காட்சியில் காதலனும் காதலியும் ஒருத்தரை ஒருத்தர் இறுக்கமாக கட்டிக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் உயர்ந்த அன்பை, காதலை, ரொமான்ஸை தன்னோட முக பாவனைகளில் ,உடல் மொழியில் கொண்டு வந்திருப்பார்.

‘அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ பாடல். இது ஷோபா மட்டும் தனிமையில் பாடகின்ற பாடல் .இயற்கையை நேசிக்கின்ற எந்தப் பெண்ணும் அந்தப் பாடலோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.தனக்கான ஆணின் முகம் தெரியாது,அவனுக்கான அன்போடவும் தாபத்தோடவும் இருக்கின்ற பெண்ணோட உணர்வை வெளிப்படுத்துகின்ற பாடல். ஒரு ஏரிக் கரையில தண்ணீரில் முழ்கி தன் கூந்தலை லேசாக அசைத்து தன் முகம் தெரியாத காதலனுக்காக தவிக்கின்ற தவிப்பை மிக நுட்பமாக கலை உணர்வோட வெளிப்படுத்தியிருப்பார். அந்த உணர்வு அந்த நீரோடையோடு கலந்திருக்கும் ஒரு தூய்மையான அன்பின் ,ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

தன்னை கடத்திட்டு வந்தவன் தன் மேல் இருக்கும் அதீத காதலை பாடலாகப் பாடுகிறான்.’என் இனிய பொன் நிலாவே’ ..அந்தப் பாடலை சூழ்நிலை இறுக்கம் ,மனத்தவிப்பு இதையெல்லாம் மீறி அந்த நிமிசத்துக்கான நேர்மையோடு ரசனையோடும் அந்த பெண் பாடலைக் கேட்கிறாள்.இதுதான் அந்தக் காட்சி. அதில் குழந்தைத்தனமான முகபாவத்தோடும் ரசனையோடும் குறுகுறுப்பான அழகில் மின்னுவார்.

ஒரு ஆண் இயற்கையை வர்ணித்துப் பாடுகின்ற பாடல்தான் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’ பாடல். படத்தில் சரத்பாபுதான் பாடுவார். இடையிடையே சின்னச்சின்ன குளோசப் காட்சிகளில் ஷோபாவின் முகம் காட்டப்படும்.அந்த சின்னச்சின்ன காட்சிகள்தான் அந்த பாடல் காட்சிக்கு ஒரு ஜீவனைத்தரும் .அந்த பாடல் காட்சியிலிருந்து ஷோபாவோட குளோசப் காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்தப் பாடல் ஒரு முழுமையற்ற தன்மையோடு இருக்கும்.

இந்த எல்லாவற்றையும் நான் ஒரு ஏக்கத்தோடு எப்பவுமே நினைச்சுப் பார்ப்பேன்..ஏனெனில் இப்போது அந்த தேவதை உயிருடன் இல்லை. மிக அதீதமான அன்புதான் ஷோபாவின் தற்கொலைக்கு காரணம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆமாம் அவர் ஒரு அன்பின் உருவமாகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனாலும் அவர் புன்னகைக்குள் ஒரு மென்சோகம் இழையோடி இருக்கும். ஷோபாவின் புன்னகை ஒரு மோனலிசா புன்னகை. அவர் அன்பை மட்டுமே நேசித்த பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அது முழுமையாக கிடைக்காத போதுதான் அவர் இந்த உலகத்தைவிட்டுப் போயிருக்க வேண்டும். ஷோபாவின் மரணத்தை நான் ஒரு தோற்றுப் போன அன்பாகத்தான் பார்க்கிறேன்.

இந்த மாதம் உயிரெழுத்து இதழில் வெளியான எனது கட்டுரை

வியாழன், 1 அக்டோபர், 2009

குருதி முத்தம்


என்
வலிதரும் காயங்களிலிருந்து
பிறந்தவை உனக்கான அன்பு
காயங்களைக் குறுக்குவெட்டு
தோற்றத்தில் பிளந்து
உன்னை ஒரு அணுவும்
வெளியேறதவாறு இறுக்கி அணைக்கிறேன்
துவளும் மயிலிறகால் இனி நீ என் காயங்களைப் பிளந்தால்
மணக்கும் நிணத்துடன் நீதான் வடிவாய்
அன்பே.
எனக்காக கண்டுபிடிக்கப்பட்ட துக்கத்தாலான பழக்குடுவையை ஏந்தி
சத்தமின்றி மென் புன்னகையுடன் ரசித்துப் பருகுகிறாய்
தவறி விழுந்து சிதறிய துளியை
புன்னகையால் இட்டு நிரப்பும் வித்தையை
உன் களவில் ஒளித்துவைக்கிறாய்.
என் கையில் இருப்பதோ
இதயத்திலிருந்து உருஞ்சி எடுக்கப்பட்ட
குருதி நிரம்பிய முத்தக் குடுவை
அதை உனக்கு ருசிக்கக் கொடுப்பதா
இல்லை
பிடிநழுவ விடுவதா
உன் பழரசமும்
என் குருதி முத்தமும் ஒன்றல்ல
அன்பே
இரண்டும் ஒரே உதட்டில் உறிஞ்சப்படுகிறது
அவ்வளவே.

திங்கள், 28 செப்டம்பர், 2009

பெருங்காதல்


பழுத்த மஞ்சள் சருகுகளின் மூர்க்கமும்
நீர் விலகாத பச்சை இலைகளின் குளுமையும்
சாயம் இழக்காத காட்டுப் பூக்களின் வாசனையும் நிறைந்து
புதிதாய் உன் நிலத்தில் தறிகெட்டு ஓடும் காட்டாறு அன்பே நான்
என் பயணத்தின் வேர்கள் உன்னுள் கிளர்ந்து பரவி
என் தனிமையை முற்றடையச் செய்யும்
பெருங்காதலாய்.

சூது நகரம் -சிறுகதை




நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப்போன்று வெக்கை வழிந்துகொண்டிருந்தது. அன்று நாள்முழுதும் சங்கர் நகர்ந்து கொண்டே இருந்தான். ஒரு இடத்திலும் அவனால் நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ பஸ்ஸில் ஏறியோ தன் நகர்வை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருந்தான். தனக்கான ஒரு மனிதனைத் தேடிக் கண்டுபிடிப்பது இல்லை யாரையேனும் தன்மீது கவனம் செலுத்த வைப்பது இதுதான் அவனது இன்றைய நோக்கமாக இருந்தது. வாழ்வின் மிகப்பெரும் சூது தன் மேல் செலுத்தப்பட்டதாக உணர்ந்தவன் அதன் ஆட்டத்துக்குள் மிக மெதுவாக நுழைந்தான்...

வேலை பார்த்து வந்த எந்த இடத்திலும் அவனை இதுவரை யாரும் மரியாதையாக நடத்தியதில்லை. பிச்சை போடுவதைப்போலதான் வேலை கொடுத்திருக்கிறார்கள். படித்த பி.ஏ வரலாறுக்கு நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்யும் பணிகிடைக்கும் என்று நினைத்தவனுக்கு பல மாதங்கள் அலைந்து திரிந்ததில் கிடைத்த முதல் கௌரமான வேலை துணிக்கடையில் சேல்ஸ்மேன் வேலை .

துணிக்கடையின் பிரமாண்டம் முதலில் அவனை மயக்கியது. அந்தக் கடையில் கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து கணக்கு பார்க்க வேண்டும் என்ற கற்பனையிலேயே உள்ளே நுழைந்தான். சேல்ஸ்மேன் வேலை மட்டும்தான் இருக்கிறது பார்க்கிறாயா என்று கேட்டார்கள். பசி அவனை விழுங்கிக்கொண்டிருந்தது. மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டான். முதல்நாள் விற்பனை பிரிவில் சீருடையோடு போய் தயக்கதோடு நின்றான். அங்கிருந்தவர்கள் இவன் பெயரைக்கூட கேட்காமல் புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கியா என்று கேள்வியோடு தங்கள் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

அவன் யாரோடும் பேசி பழக்கம் இல்லாதவனாக இருந்தான். எவரிடமும் பேசாமல் வரும் போகும் கஸ்டமர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். முதல் நாள்தானே வேலை பழகியதும் அவனும் தங்களைப்போல் ஆகிவிடுவான் என்று நினைத்தார்கள். அதற்கடுத்து தொடர்ந்த நாட்களிலும் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்ப்பவனாக மட்டுமே இருந்தான். கஸ்டமர்களிடம் நயமாகப்பேசி துணிகளை வாங்க வைக்க முடியவில்லை. ஒரு ஊமையைப்போல துணிகளை எடுத்துப் போடுவதும் மடித்து வைப்பதுமாக இருந்தான். இப்படி யாரோடும் பேசாமல் இருந்தால் வேலையைவிட்டு எடுத்துவிடுவோம் என்று சூப்பர்வைஸர் பலமுறை எச்சரித்துவிட்டார். சரி சரி என்று தலையாட்டிவிட்டு அமைதியாகப் போவான்.

எப்படியும் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டுமென்ற முனைப்பில் மேன்ஷனில் உடன் தங்கும் அறைவாசிகள் யாரும் இல்லாத நேரத்தில் மற்ற விற்பனையாளர்கள் பேசுவதைப்போல் தானாகப் பேசிப்பார்த்தான். இளம்பெண்களிடம் 'இந்த கலர் உங்க ஸ்கின் கலருக்கு கரெக்ட்டா இருக்கும்' என்று இவன் சொல்ல அவர்களும் சிரித்துக்கொண்டே அந்த துணியை வாங்கிச் செல்வது போல் கற்பனை செய்தான். மறுநாள் எப்படியும் இன்று கஸ்டமர்களிடம் பேசி துணிகளை வாங்க வைப்பது என்ற முடிவுடன் சென்றால், அவன் திட்டம் எல்லாம் விற்பனை பிரிவுக்கு உள்ளே நுழையும் வரைதான். அதன்பின் அவன் வாய் விலங்கிட்டது போலாகிவிடும். சாதாரண நாள்களில் இருப்பதைவிட அப்படித் திட்டமிட்ட நாள்களில் முகம் இன்னும் காய்ந்து இறுகிக்கொள்ளும்.

தான் இருக்கும் இடத்தில் அடுக்கப்பட்டிருக்கும் துணிகளை பார்க்காமல் எல்லோரும் கடந்து செல்வதாகவே நினைத்தான். எல்லோர் மீதும் எரிச்சலாக வந்தது. விற்பவன் எதையாவது பேசவேண்டும் என்று ஏன் கஸ்டமர்கள் நினைக்கிறார்கள்? பிடித்திருத்தால் துணியை வாங்கிச் செல்ல வேண்டியதுதானே. எதற்காக பேசிச் சிரிக்க வேண்டும். எல்லாமே அவனுக்கு விகாரமாகப்பட்டது.

அவனால் ஒருபோதும் கஸ்டமர்களை கவரமுடியாது என்று நினைத்த நிர்வாகம் எல்லா விற்பனை பிரிவுகளிலும் மலைமாதிரி குவிந்து கிடக்கும் துணிகளை மடித்து வைக்கும் வேலையை மட்டும் செய்தால் போதும் என்று விற்பனை பிரிவிலிருந்து மாற்றிவிட்டார்கள். நாளெல்லாம் துணிகளை மடித்து மடித்து அவன் மணிக்கட்டிலும் முழங்கையிலும் எப்போதும் நீங்காத வலி இருந்துகொண்டே இருந்தது....

உடன் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் சிநேகமாக பேச மறுப்பதும், யாரும் தன்னை விரும்பாதவர்களாக இருப்பதும் ஏன் என்றும் அவனுக்கு தெரியவில்லை. யாரும் தன்னிடம் நட்போடும் கைகுலுக்கி கொள்ளவில்லை என்பது அவனுக்கு பெரும் பாரமாக இருந்தது. இதுவரை முத்தத்தின் ஸ்பரிசத்தையும் அடையவில்லை என்று நினைக்கும்போது துக்கம் கழிவிரக்கமாகி உள்ளுக்குள் உடைந்து போனான். அந்த முதல் முத்தம் ஒரு பிச்சைக்காரியிடமிருந்தோ இல்லை ஒரு பைத்தியகாரியிடமிருந்தோ கிடைத்தால் கூட பரவாயில்லை ஆனால் அது வெகுவிரைவில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான்.

எல்லோரும் எதன் நிமித்தமாகவோ விடாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பேசவிடாமல் தன்னைக் கட்டிப் போட்டிருப்பது எது என்றும் புரியவில்லை. எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பெயிலானவர்கள் எல்லாம் அங்கே வாய்கொள்ளாச் சிரிப்பும் பேச்சுமாய் நிறைய ஆடைகளை விற்றுத் தீர்க்கிறார்கள். தான் படித்த டிகிரி இங்கே பேச்சற்று கேவலமாக மதிப்பிடப்பட்டு கிடக்கிறது. பேச்சுதான் எல்லாம் என்றால் படிக்காமல் சிறுவயது முதல் பேசுவதை மட்டுமே தகுதியாக வளர்த்திருக்கலாம். அதுவும் கொஞ்சம் பொய்யாக பேச பழகிவிட்டால் வாழ்க்கை சிரமம் இல்லாமல் கழியும் என்று தனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டான்.

சங்கருக்கு விவரம் தெரிந்த நாளில் உடம்பெல்லாம் புண்களோடு ஒரு சிறு நகரத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தான். எங்கிருந்து எப்படி அங்கே வந்தான் என்று யாரும் அவனுக்குச் சொல்லவில்லை அவனும் யாரிடமும் அதைக் கேட்க விரும்பவில்லை. முன்பு இருந்த பசி என்ற ஒரு விசயம் இல்லை என்பது மட்டுமே அவனுக்கு விடுதலையாக இருந்தது. சீழ் ஒழுகிய புண் ஏற்படுத்திய வேதனையால் அவன் இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்தான். அவன் கதறல் எல்லோருடைய தூக்கத்தைக் கெடுப்பதாகவும் அப்படிச் செய்தால் மீண்டும் தெருவில் கொண்டு விட்டுவிடுவோம் என்று அவர்கள் சொல்ல அவன் பற்களை கடித்தபடி வலியைப் பொறுத்துக்கொண்டான்.

சீழ் வடிந்து புண் தழும்பாகிப்போனது. வலியடக்கி பழக்கப்பட்ட நாளில் தானாக யாரிடமும் போய் பேசுவதை நிறுத்திக்கொண்டான். யாராவது பேசினால் மட்டும் பதில் சொல்பவனாக இருந்தான். அங்கே இருந்தவர்கள் என்ன செய்யச் சொன்னார்களோ அதை மட்டும் செய்துகொண்டிருந்தான். நான்கு மூலைக்குள் படிப்பு நான்கு மூலைக்குள் தூக்கம் இதுமட்டுமே வாழ்க்கை என்றாகிப்போனது. வரிசையாக சாப்பாட்டுக்குச் செல்வது. வரிசையில் நின்று குளிப்பது இது மட்டுமே உலகத்தின் ஒழுக்கம் என்று அங்கே கற்பிக்கப்பட்டது. சொல்லிக்கொடுக்கும் பாடங்களை அவனால் கற்பனைக்குள் கொண்டு விரிவுபடுத்த தெரிந்திருக்கவில்லை. கண்களில் பார்க்காத எதையும் காட்சிக்குள் கொண்டுவரமுடியாமல் தவித்தான். படித்ததில் மூளைக்குள் தங்கிய கொஞ்ச வார்த்தைகளை பேப்பரில் எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டான். அரசு கல்லூரி, அரசு விடுதி என்று அவனுடைய கல்லூரி காலத்திலும் வாழ்க்கை குறுகிய இருந்தது. கல்லூரி படிப்பை முடித்ததும் மிகப்பெரும் ஜன நெரிசலில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆதவற்றோர் இல்லத்திலிருந்து ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறி இந்த பெரு நகர வாழ்க்கைக்குள் கரைந்தான்...

2

அக்கா வீட்டில் இல்லாத சமயங்களில் எல்லாம் படுக்கைக்கு அழைக்கும் மாமாவை சமாளிக்க முடியாமல் ராஜலட்சுமியும், கொடுமைப்படுத்தும் சித்தியை தட்டிக்கேட்காமல் மௌனசாட்சியாக அமர்ந்திருக்கும் அப்பாவை சகிக்க முடியாத கவிதாவும் ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். ராஜலட்சுமிக்கும் பதினெட்டு வயதும் கவிதாவிற்கு பதினேழு வயதும் ஆகியிருந்தது.

இருவரும் ஒன்றாக கயிறுமில்லுக்கு பஸ்ஸில் ஏறி வேலைக்குச் செல்லும் நாளிலிருந்தது சிநேகிதிகளாக இருந்தனர். எப்போதும் சோகம் அப்பியிருக்கும் முகத்துடன் காணப்படும் அவர்களின் கற்பனை ஒன்றாக இருப்பதை கண்டுகொண்டனர். இந்த ஊருக்கு வெளியே எங்கோ தூர நகரத்தில் தங்களுடைய வாழ்க்கை சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்த அவர்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி சென்னை பஸ்ஸில் ஏறிய அன்று பெருமழை பெய்தது. பயண வழியெங்கும் கற்பனையைப் பெருக்கி ஆடையில் படிந்த ஈரவாசனையோடு கனவுகளை சுமந்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் வந்து இறங்கினார்கள்.

ஆதவற்றோர் இல்லத்திற்கு வாசகர்கள் நிதி அனுப்புமாறு நாளிதழில் வந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியை தேடிச் சென்றனர். அந்த ஆதவற்றோர் இல்லம் நகரத்திலிருந்து விலகி ஒதுக்குப்புறமாக இருந்தது. இருவரும் எட்டாம் வகுப்புவரை படித்திருந்ததால் நாளிதழில் குறிப்பிட்டிருந்த முகவரியை தேடிக் கண்டுபிடித்துச் சென்றுவிட்டனர்.

யாருமே இல்லாத அநாதைகளுக்கு மட்டும்தான் இங்கே இடம் என்று இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை வெளியே போகச்சொன்னார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கும் கிடைக்கும் நிதியில் ஏற்கனவே அங்கே தங்கியிருக்கும் ஆதவற்றோர்களை கவனிக்கவே போதவில்லை என்று கூறினார்கள். தங்களால் ஊருக்கு திரும்பிப் போகமுடியாது, தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று இரண்டு பெண்களும் அழுது புலம்பி அங்கேயே உட்கார்ந்தனர். மனமிறங்கிய இல்லத்தினர் தங்க இடம்கொடுத்து அவர்களுக்கு தையல் பயிற்சி அளித்தனர்.

அதற்குபின் இரண்டு பெண்களும் தூங்கும் நேரத்தில் பெருங்கனவுகளை பேசிக்கொண்டிருந்தனர். அந்த இல்லத்தைவிட்டு வெளியேறி எப்போதும் வாகனங்கள் இரைந்தோடிக்கொண்டிருக்கும் நகரத்தின் மையத்தில் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆறுமாத காலத்தில் தையல் பயிற்சி முடித்த அவர்கள் பெரிய துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டி பகலெல்லாம் நகரத்தில் அலைந்துகொண்டிருந்தார்கள். அந்த மாதிரியான நேரங்களில் பைக்கில் ஆண்களை கட்டிப்பிடித்து பறக்கும் பெண்களை பார்த்து ஏங்கினார்கள். சினிமா தியேட்டருக்குள் உள்ளே போகாமல் வெளியே இருந்தபடி சந்தோசமாக பேசி சிரித்துக்கொண்டிருக்கும் மனிதர்களை உற்றுநோக்கினார்கள். அவர்களைப்போல் தங்களுடைய சந்தோஷம் எதில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியும் நோக்கில் அவர்கள் தேடுதல் நகர வீதிகளில், பிரமாண்டமான கட்டடங்களில், வாகன நெரிசல்களில் தொடர்ந்துகொண்டிருந்தது.

ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத நிறத்தில் பாவாடை தாவணி அணிந்திருந்த பெண்கள் இருவரும் சங்கர் வேலைபார்த்த அந்த பிரமாண்டமான கடைக்குள் நுழைந்தார்கள். அந்தக் கடையில் வேலை கேட்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது. தாங்கள் அணிந்திருக்கும் கவனமில்லாத ஆடைகளை பார்த்து யாரும் வேலை தரமாட்டார்கள் என்று முடிவுசெய்து ஒரு புதுச் சுடிதாரை வாங்கும் பொருட்டு அந்த கடைக்குள் நுழைந்தார்கள்.

அன்று சுடிதார் செக்ஷனில் தள்ளுபடி போட்டதால் பெருங்கூட்டமாக இருந்தது. துணியை மடித்துக் கொண்டிருந்த சங்கரை கஸ்டமர்களை கவனிக்குபடி அங்கே அனுப்பினார் சூப்பர்வைஸர். அதை நிரந்தரமாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் வரிசையாக தொங்கவிடப்பட்டிருக்கும் துணிகளுக்கு மத்தியில் புன்னகையை வரவழைக்கும் பாவனையில் நின்றுகொண்டிருந்தான். முந்நூறு ரூபாய் மதிப்புள்ள சுடிதார் எண்பது ரூபாய் என்று போடப்பட்டிருந்த சுடிதார் செக்ஷனுக்கு வந்த பெண்கள் எல்லாம் துணியில் தரத்தை பார்த்துவிட்டு அந்த இடத்தைக் கடந்துகொண்டிருந்தார்கள்.

இவனிடம் எதுவும் பேசாமல் எண்பது ரூபாய் சுடிதார்களை ஆசையோடு வெகுநேரம்
தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்த ராஜலட்சுமியும் கவிதாவும் ஆளுக்கொரு சுடிதாரை தேர்வு செய்து பில்போடுமாறு அவனிடம் கொடுத்தனர். அவர்கள் இருவருக்கும் அந்த சுடிதார் பொருத்தமாக இருக்கும் என்று அவன் சொல்ல நினைத்தான். பின்பு எதுவும் சொல்லாமல் கவுண்டரை நோக்கி அவன்போக பின்னாடியே போன இருபெண்களும் தங்களிடம் இருந்த பணத்தை தேடித் தடவிக் கொடுத்தார்கள். பஸ்ஸுக்கு செல்ல பணம் மீதமிருக்கிறதா என்பதை பலதடவை உறுதிசெய்த பின்னரே பணத்தைக்கொடுத்தார்கள். அவர்கள் சிரித்த முகத்தோடு பையை வாங்கிச் செலவதையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் சுமாராக துணிகளை விற்பனை செய்திருப்பதால் சங்கர் இனி தன்னை விற்பனை செக்ஷனிலே போடுவார்கள் என்று நம்பினான். ஆனால் அடுத்த நாளும் அவனை துணியை மடித்துவைக்குமாறு சூப்பர்வைஸைர் சொல்லிவிட்டார். கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த சங்கர் ,தன்னால் நிற்க முடியவில்லை மயக்கமாக வருகிறது இன்று விடுமுறை வேண்டுமென்று கேட்டான். கீழேபோய் மேனேஜரிடம் கேட்டுவிட்டு போகுமாறு சொன்னார்.

அவன் கீழே இறங்கி செல்ல, அங்கே நேற்று சுடிதார் வாங்கிச் சென்ற பெண்கள் அந்த சுடிதாரை அணிந்துகொண்டு மேனேஜரிடம் தங்களுக்கு இந்தக் கடையில் வேலை கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் நினைத்தது போலவே அந்த பெண்களுக்கு சுடிதார் பொருத்தமாக இருந்தது. உடனடியாக அதை அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தான். இவன் நிற்பதை பார்த்த மேனேஜர் மிகக் கேவலமாக முகத்தை வைத்துக்கொண்டு என்ன என்று கேட்டார். இவன் விவரம் சொல்ல, செய்யுற வேலைக்கு லீவு வேற... போ என்று அவமரியாதையாக அனுப்பி வைத்தார். இதற்குமேல் இங்கே வேலையைத் தொடரமுடியாது என்று அவனுக்குத் தோன்றியது. வாங்கும் சம்பளம் தங்கும் இடத்திற்கு சாப்பாட்டுக்குமே போதவில்லை. சேமிப்பு என்று எதுவுமில்லை. பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்தபடி அங்கிருந்து நடந்தான். 'இங்கே வேலை எதுவும் இல்லமா' என்று கறாரான குரலில் மேனேஜர் கத்த அந்த பெண்கள் இவனை பின்தொடர்ந்து கடையை விட்டு வெளியேறினார்கள்.

எங்கே போவது என்று தெரியாமல் பஸ் ஸ்டாண்ட்டில் சிமெண்ட் திட்டில் அமர்ந்து ஒவ்வொரு பஸ்ஸாக கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த சங்கர் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறிக்கிளம்பினான். புகையோடு வெக்கையைக் கிளப்பிக்கொண்டு சென்ற பஸ்ஸின் ஜன்னல் ஓரத்திலிருந்து பார்த்தான் அந்த பெண்கள் இருவரும் பஸ்ஸ்டாண்டில் சிமெண்ட் திட்டில் அமர்திருந்த இரண்டு இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படியே பஸ்ஸிலிருந்து இறங்கி அவர்களிடம் பேசலாமா என்று யோசித்தான். ஏனோ அந்தப் பெண்கள் அவனுக்கு மிக நெருக்கமான தோழிகளைப்போல் தோன்றினார்கள். அவன் யோசிக்கும்போதே பஸ் அங்கிருந்து நகர்ந்து தன் பங்குக்கு நகரத்தின் வெப்பத்தை கூட்டியபடி பாலத்தின் மேலே போய்க்கொண்டிருந்து. அவன் பெயர் தெரியாத நிறுத்தங்களில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஏறிக்கொண்டிருந்தான். மீண்டும் பஸ், ரயில் என மாறி மாறி வெறிகொண்டு அலைந்தான் .

நகரம் விரித்த வலையில் வசமாக மாட்டிக்கொண்டதாக நினைத்த அவன் பயணம் இலக்கில்லாமல் சென்றுகொண்டிருந்தது . ஓயாமல் எங்கேயோ நடந்து போய்க்கொண்டிருக்கும் மக்கள். நிரம்பி வழியும் ரயில், பஸ் நிலையங்கள். இரவெல்லாம் ஒளிரும் விளக்குகள் இப்படி எல்லாம் அவன் வாழ்வை மாற்றிவிடும் என்றிருந்தான். நாள்கள் செல்ல செல்லத்தான் நகரத்தின் சூழ்ச்சி புரிந்தது. தன்னைப்போல் தனிமை கொண்டு அலையும் மனிதர்களையும் நகரம் விடாமல் பிடித்திருக்கிறது என்பதையும் அதே ரயில், பஸ் நிலையங்களின் மதிய வேளைகளில் கண்டுகொண்டான். தனித்துவிடப்பட்ட பிச்சைக்காரன், பிச்சை எடுப்பவனையே பார்த்துக்கொண்டிருக்கும் மனிதன், ஒவ்வொரு ரயிலையும் தவறவிட்டு தண்டவாளங்களை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருக்கும் பெண் என்று கைவிடப்பட்டவர்களை நகரம் தன்னுள் வைத்து சிரித்துக் கொண்டிருக்கிறது.

வெயில் நீங்கிய மாலையிலும் வெம்மை தாக்கிக்கொண்டிருந்தது. வியர்வையில் நனைந்து உப்பு பரிந்த சட்டை கசகசப்பையும் அரிப்பையும் தந்தது. நிராகரிப்பின் வலி அவனை உள்ளுக்குள் கிளர்தெழச் செய்தது. முழுதாக வெளிச்சம் மறையக் காத்திருந்தான்.





பஸ் ஸ்டாண்டில் பார்த்த இளைஞர்கள் வேலை வாங்கித் தருகிறோம் என்று சொல்ல ராஜலட்சுமியும் கவிதாவும் அவர்களுடன் சென்றார்கள். எக்ஸ்போர்ட் கம்பெனியிலே நாளைக்கே வேலை கிடைச்சுடுமா என்று நம்பமுடியாதவளாய் திரும்பத் திரும்ப அந்த இளைஞர்களைக் கேட்டுக்கொண்டே வந்தாள் கவிதா. ரோஸ் கலர் சட்டை போட்ட இளைஞன் தனக்கு காதலனாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த ராஜலட்சுமி அவன் பெயரைக் கேட்டாள். அவன் அவள் கைகளை பிடித்து சுரேஷ் என்றான். அவள் கைகளை பின்னால் இழுத்து வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள். நீல கலர் பனியன் அணிந்த இளைஞன் கவிதா கேட்காமலே என் பேர் ரமேஷ் என்றான். இரண்டு பெண்களும் ஏதோ ஜோக்கை கேட்டது போல் சுரேஷ், ரமேஷ் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி சிரித்தார்கள். பின்பு நகரத்து காதலர்களைப்போல சினிமாவுக்கு போனார்கள். இளைஞர்களை தங்கள் காதலர்களாக நினைத்துக்கொண்ட பெண்கள் படம்பார்க்கும்போது கைகளை பிடித்துக்கொள்ளச் சம்மதித்தார்கள். இடைவேளையில் ஐஸ்க்ரீம் வாங்கிச்சாப்பிட்டார்கள்.

கடற்கரை, ஸ்பென்சர் என்று நேரம் போவது தெரியாமல் இளைஞர்களின் பின்னால் போய்க்கொண்டிருந்தார்கள். அந்த பெண்களுக்கு நகரம் மிகச் சுதந்திரமானதாகத் தெரிந்தது. இருட்டில் நகரம் இன்னும் அழகாக இருப்பதாக நினைத்தார்கள். நகரத்தின் நடுவில் ஓடிய கூவம் ஆறும், அதைச் சுற்றிய குடிசைகளும், பழைய அடுக்குமாடிக் கட்டடங்களும் அவர்களுக்கு வசீகரமாகவே தெரிந்தன. நகரத்தின் மாயவலைகள் கால்களைச் சுற்ற, புதிர்களை அவிழ்க்கும் விடையாக இரவை நினைத்தார்கள்.

இருட்டின் நிறமும் நகரத்தின் வெளிச்சமும் சங்கரின் தனிமையை அதிகப்படுத்தியது. இனி யாரிடமும் கைகட்டி நின்று பேசி சிரிச்சு வேலை பார்க்க கூடாது. ஆனால் பணத்தை எப்படியாவது சம்பாதித்து விடவேண்டும் என்று முடிவெடுத்தான் சங்கர். வெளிச்சம் குறைந்த நகரத்தின் புறநகர் பகுதியில் யாருக்கோ காத்திருப்பதைப்போல் இருட்டில் நின்று தன்னைக் கடந்து செல்லும் பெண்களின் கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். ஒடிசலான தேகம் கொண்ட ஒரு பெண் ரோட்டில் நடந்து செல்கிறோம் என்ற பிரஞ்ஞையே இல்லாமல் போய்க்கொண்டிருந்தாள். பஸ் நெரிசலில் பின்னால் நின்று இடித்தவனின் கோர முகமோ, புழுக்கம் குடிகொண்டிருக்கும் சமையல் அறையின் வாசனைபற்றியோ, அல்லது ராத்திரி படுக்கையில் கேட்கப்போகும் கணவனின் வசைச்சொல்லோ ஞாபகத்தில் வந்து அவளை கலக்கமுறச் செய்திருக்கலாம். தன் கழுத்தில் விழுந்த கைச் செயினை அறுத்துக்கொண்டு ஓரடி முன் வைக்கும்வரை அவள் எதையும் உணரவில்லை. அந்தப் பெண்ணைத் திரும்பி பார்த்தபடி ஓடத்துவங்கினான்.

அவள் கண்களில் தெரிந்த மிரட்சியையும் சோகத்தையும் பார்த்த அவனால் வெறிகொண்டு ஓட முடியவில்லை. நடை தளர்ந்தது. அவன்
பின்னால் கூக்குரலுடன் ஆட்கள் ஓடிவந்துகொண்டிருந்தார்கள். எப்படி கீழே விழுந்தோம் என்றே தெரியாமல் அவன் முதல் திருட்டில்
பிடிபட்டான். அன்று முழுதும் அவன் சாப்பிட்டிருக்கவில்லை.

புறநகர் காவல் நிலையத்தில் பிளந்த உதடுடன் மூலையில் உட்கார்ந்திருந்தான். அவன் கடையில் சுடிதார் வாங்கிய ராஜலட்சுமியும் கவிதாவும் கிழிந்த நாராய் அவன் பக்கத்திலிருந்த மரபெஞ்சில் கிடத்தப்பட்டனர். நேற்று முழுவதும் அந்தப் பெண்களுடன் சுற்றிய முன்பின் தெரியாத அந்த இளைஞர்கள், நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் ரயில்வே தண்டவாளத்தின் பின்புறமிருந்த புதருக்கு அடியில், இரு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதோடு அடங்காத வெறிபிடித்த நாய்கள் அவர்களின் மற்ற நண்பர்களையும் வரவழைத்து பெண்களை நாசம் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்கள் தங்கள் சக்தியெல்லாம் ஒன்று சேர்த்து கத்த பக்கத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்கள் வந்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

'எவன் கூப்பிட்டாலும் பின்னாடியே போயிருவீங்களா? அப்படி உடம்பு தெனவு எடுத்து போய் திரிஞ்சிருக்கீங்க...இன்னும் வாய் கூசும் கெட்ட வார்த்தைகளால் பெண் காவலர்கள் இருபெண்களையும் ஏசினார்கள். கூனி குறுகி அவமானத்தில் நெளிந்த பெண்களின் கண்களிலிருந்த கனவு முற்றிலுமாக தொலைந்திருந்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சங்கரை போலீஸ் வேனில் ஏற்றினார்கள். அவனுக்கு எதிர் இருக்கையில் ராஜலட்சுமியையும் கவிதாவையும் அமரவைத்திருந்தார்கள்.. தன்னை துணிக்கடையில் பார்த்தது அந்த பெண்களுக்கு ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. அவர்கள் உணர்விழந்து நொறுங்கிக்கிடந்தார்கள். அந்தப் பெண்களை பெண் காவலர்கள் அரசு மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றார்கள். இப்போது நகரம் அவர்களுக்கு சாப இடமாக காட்சியளித்தது. நகரத்தின் எந்த மூலையிலிருந்தும் கொடும் வாள்கள் தங்கள் மீது பாய்ச்சப்படலாம் என்று பயப்பட்டார்கள்.

நேற்று பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பெண்களிடம் பேசியிருந்தால் இன்றைய நிகழ்வு எதுவுமே நடந்திருக்காது என்று சங்கர் நினைத்தான். நகரத்தின் தார்ச்சாலையெங்கும் அவன் தனிமையையும் பயத்தையும் பரப்பியபடி வாகன நெரிசலில் போய்க்கொண்டிருந்தது போலீஸ் வேன். இன்னும் இன்னும் மனிதர்களை உள்ளிழுக்கும் வசீகரத்துடன், பரபரப்பாகவும் பகட்டாகவுமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது நகரம்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

தரை தேடிப் பறத்தல்




கருமேகங்களுக்குள் நுழைந்து நுழைந்து தேடியும்,என்னைத் தன் போக்கில் இழுத்துச்சென்ற, ரெக்கைகள் மிக நீளமாக இருக்கும் அந்தக் கருஞ்சிகப்பு வண்ணப் பறவையைக் காணவில்லை. தன் ரெக்கை விரித்தலின் நிழலிலேயே என்னைப் பின் தொடர்ந்து பறக்கச் சொல்லும் அப்பறவையோடு நான் எப்போதிலிருந்து உடனிருக்கிறேன் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் அதனோடு இருக்கும் காலத்திலிருந்தே என் ரெக்கைகள் குட்டையாகவே இருக்கின்றன. என் வெண் ரெக்கைகள் வளர வளர கருஞ்சிவப்பு பறவை வெட்டி காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கிறது. மிகக் குறுகிய எல்லைக்குள் பறக்க ஏதுவாக மட்டுமே என் ரெக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறன. வான் அண்டத்தில் ஒரு எல்லையை வகுத்து நீ இதற்குள் தான் பறக்கவேண்டும். இந்த எல்லைகளைத் தாண்டிப் போகக்கூடாது என எச்சரிக்கை விடுத்து எங்கயோ பறந்து சென்று திரும்பி வரும் அந்தக் கருஞ்சிகப்புப் பறவை. அப்படி அது சென்று திரும்பி வரும்போதெல்லாம் அதன் அலகுகளில் எனக்கான இரை இருக்கும். ஏதேனும் ஒரு மேகத்தில் வைத்து அந்த இரையை உண்பேன். கூடு கட்டுதல் பறவையின் சோம்பேறித்தனம் என கருஞ்சிகப்பு பறவை எனக்கு கற்பித்திருந்தது. எனக்கென்று ஒரு கூடு இல்லை. நான் அதனோடு இணைந்து பறத்தலைத் தவிர வேறு ஏதும் அறியாததாக இருந்தேன். பறந்து பறந்து என் சிறகுகள் சோர்ந்து போகும் போது கருஞ்சிகப்பு பறவை என்னை தன் சிறகுகளுக்குள் பொதிந்து மூடி..எங்கோ அழைத்துச் செல்லும்.அந்தப் பயணம் முழுவதும் என் கண்களுக்கு இருளின் நிறம் மட்டுமே பரிட்சயமாகி இருக்கும்.பிறகு கருஞ்சிகப்பு பறவை தன் பறத்தலை ஓரிடத்தில் நிறுத்தி தூங்கும். அதன் பிறகும் தன் சிறகு கூட்டிலிருந்து என்னை விடுவிப்பதில்லை. அதன் ரெக்கைக்குள் இறுக்க மூடி என்னையும் தூங்கச் சொல்லும். அப்போதெல்லாம் என் மூச்சு அழுந்திக்கொண்டிருக்கும். மூச்சடைந்து குறுகி ஓய்வெடுப்பதைவிட சிறகுகள் ஓய இடைவிடாது பறந்ததலே மேல் என்று தோன்றும். மீண்டும் இருள் விலகி வெளிச்சம் வரும் போது நாங்கள் மேகக் கூட்டத்திற்குள் மிதந்து கொண்டிருப்போம். அப்போது என் மூச்சு சீராக இயங்கும். .

என் பறத்தல் எப்போதும் நிர்பந்தங்களின் எல்லைகளுக்கு உட்பட்டே நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்துமே பறந்து கொண்டிருந்தேன். என் சிறகுகள் ஓய்ந்து போயின. வான் எல்லையை கடந்து எதையும் நான் அறியாது இருந்தேன். என்னை தன் வெளிகளை விட்டு விலகிச் செல்லாமல் கண்காணிப்பதிலேயே கருஞ்சிவப்பு பறவை தன் தூக்கம் இழந்தது. எப்போதாவது நான் அதன் வெளியே துறந்து பறக்க எத்தனித்தால் என் சிறகுகள் இன்னும் குட்டையாக்கப்படும். சில சமயங்களில் அதன் கோபம் அதிகரித்தால் என் சிறகுகள் வன்மத்தோடு பிடுங்கப்படும்.
அப்போதும் என் சிறகிலிருந்து தெறிக்கும் ரத்தம் வெண் மேகங்களில் சிதறிப் பறக்கும். அந்த வலி அறிந்து என் பறத்தலை குறுக்கியே வைத்திருந்தேன். கருஞ்சிகப்பு பறவை மீண்டும் மீண்டும் என்னைத் தனியே விட்டுவிட்டு இரை தேடப்போகும். காலநேரம் இல்லாமல் என் பொழுதுகள் வெறும் பறத்தலிலும், அது கொண்டு வரும் இரைக்கான காத்திருத்தலிலும் கழிந்தன. எனக்கான உணவை நானே தேடிக்கொள்ள ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை.




ஆயினும் அதன் மீதான நேசத்துடன் பறந்து பறந்து சிறகுவிரித்தேன். இந்த பறத்தலில் தரை இறங்காமல் போனாலும் பரவாயில்லை. அதனோடு சேர்ந்து பறக்கும் பொழுதுகளில், அந்தரம் மிக அழகாக தெரிந்தது. வலி பழகிப் போனது. என் தரை தொடா பறத்தல் எல்லையற்றது என்ற கர்வத்தில் இருந்தேன். ஒரு நாள்...அதனை பின்தொடர முடியாததொரு பொழுதில் திசையறியாத என்னை தனியே விட்டுவிட்டுப் போய் விட்டது. நான் இளைப்பார இடம் தேடித் தேடி அலைந்தேன். என் ரெக்கைகளுக்கு தரையின் தூரம் தெரியவில்லை. பூமியின் எல்லைக்கெட்டாத தொலைவில் அது என்னைத் தொலைத்துவிட்டு சென்றுவிட்டது. பூமி மிக மிக தொலைவில் இருக்குமெனத் தோன்றியது. என் கால்கள் வலியில் சுழன்றது. பறக்க இயலாமல் போனால் அது பறவை இல்லை என அது எனக்கு கற்றுக் கொடுத்திருந்தது. அதன் பொருட்டே தரை இறங்கப் பயப்பட்டேன். என் வானில் அதுவன்றி வேறெந்த பறவையையும் நான் அதற்கு முன்
அறிந்திருக்கவில்லை..தனித்த ஒற்றைப் பறத்தல் எனக்கு அயர்ச்சியூட்டியது. இரையின்றி வெறும் காற்றாய் பறந்தது என் உயிர். என் வெள்ளைச் சிறகுகள்
பொசுங்கிப் போகும் அளவிற்கு நான் தாகத்தோடு செத்து விழுவது என்ற முடிவோடு தீராத தவிப்போடு காற்றின் வேகத்தைவிட சுழன்றடித்துப் பறந்தேன்.

என் தேடல் வீண் போகவில்லை. தூரகருமேகங்களுக்கு மத்தியில் அது நுழைவதை பார்த்துவிட்டேன். மிச்சமிருந்த என் உயிரை ஒன்று திரட்டி நான் என் கருஞ்சிகப்பு பறவையை நோக்கிப் பறந்தேன். கரு மேகங்களிலிருந்து சில மஞ்சள் இறகுகள் விழுந்தன.கருஞ்சிகப்பு பறவை என் பார்வை தவிர்த்து பறக்க முயன்றது. நான் அதன் பறத்தலின் பாதையில் வழி மறித்து நின்றேன்.’’இளைப்பாறுதலை என் சிறகுகள் யாசிக்கின்றன. என் இரைப்பை வெறும் காற்றால் நிரம்பி இருக்கிறது.என்னை அழைத்துச் செல்.உன் வழி காட்டுதல்களின்றி எனக்குப் பாதைகள் இல்லை. வானம் மட்டுமே அறிந்த என்னால் தரை தொட முடியவில்லை .என் சிறகுகளை,என் வாழ்வை,மிச்சமிருக்கும் என் கனவுகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.என்னை தூக்கிச்செல்' என்றேன்.

என் உயிர் காக்கும் பொருட்டு கருஞ்சிவப்பு பறவையின் நீள ரெக்கைகளை பிடித்துக்கொள்ள முயற்சித்தேன். என்னை உதறித் தள்ளிய அது
'இனி உன் பாதைகளை நீயே வகுத்துக் கொள்.என் எல்லைகளை கடந்து போ..நான் உன்னை வெறுக்கிறேன்.உன் மீதான பற்றுதல் என்பது கடந்த காலம்.போய் வா' என்றது. ஏன் இத்தனை வெறுப்பு..என்னை கடந்து போவதற்கான காரணம் என்ன. உன் சொல்படிதானே ரெக்கைகளை குட்டையாக்கி வலியோடு பறந்துகொண்டிருக்கிறேன். என் மீதான் குறை என்ன' என்று கேட்டேன். '.வெண்மையை நான் வெறுக்கிறேன் இப்போதெல்லாம் எனக்கு மஞ்சள் நிறம்தான் பிடித்ததாக இருக்கிறது. இன்னும் சொல்வதானால் வெண்மை என்பது ஒரு நிறமே அல்ல..'என்றது. உலகத்திலே தனக்கு பிடித்த நிறம் வெள்ளை நிறம் என்றும். தனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே வெள்ளை மிகப்பெரும் மயக்கத்தைக் கொடுக்கும். உன் நிறத்திற்காகவே உன்னைச் சில முரட்டு பறவைகள் கபளிகரம் செய்துவிடும்.உன்னைப் பாதுகாக்கவே எப்போதும் உன்னை என் சிறகுக்குள்ளே வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தது. இப்போதோ என் வண்ணத்த்தை பொருளற்றதாக்கி, தன் சிறகுக்குள் மஞ்சள் வண்ணப் பறவையைத் தூக்கிக் கொண்டு என் பார்வையை கடந்து வெகு தூரம் சென்று மறைந்தது. ஒன்று மட்டும் எனக்கு அப்போது புரிந்தது. கருஞ்சிவப்பு பறவைக்கு, ஒரு நாள் மஞ்சள் பறவையும் நிறமற்றதாகிவிடும். மஞ்சள் பறவையும் என்னைப் போல மொன்னையாக்கப்பட்ட சிறகுடன் தனித்து திரியும்.

இனி என் வாழ்வில் கருஞ்சிகப்பு பறவை இல்லை என்று நான் உணர்ந்தபோது வானம் நீல நிறம் கொண்டிருந்தது. என் தனித்த இலக்கற்ற பறத்தல் அப்போது துவங்கியது. எல்லைகளைக் கடந்து நான் கண்களை மூடியபடி பறக்கத் துவங்கினேன். திசைகள் அறியா என் சிறகுகள் தரையைத் தேடித் தேடிக் களைத்தன. நீண்ட பறத்தலுக்குப் பிறகு.. என் பார்வை தூரத்தில் நீளமான நீலச்சிறகுள்ள பெயர் தெரியாத பறவை ஓன்று பறந்து கொண்டிருந்தது. என் கடந்தகால பறத்தலில் ஒரு போதும் சக பறவைகளைப் பார்க்க நான் அனுமதிக்கப்பட்டதே இல்லை. அந்த நீலப் பறவை என் அருகே வந்தது.’ ரொம்ப நேரமாகப் பார்க்கிறேன்.ஏன் அலைந்து கொண்டிருக்கிறாய்’ என்றது’. 'நான் தரை தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன். என் ரெக்கைகள் முழுவதுமாக உதிர்ந்து என் உடல் கூடாகும் வரை
பறப்பேன்' என்றேன். 'என்ன பைத்தியக்காரத்தனம் இலக்கற்று,திசையற்று பறந்து கொண்டிருந்தால் ஒரு நாளும் தரை தொட முடியாது' என்று உனக்குத் தெரியாதா என்றது அந்த நீலப் பறவை. நான் மௌனமானேன். 'நீ தரை பார்த்ததே இல்லையா'. 'இல்லை' என்றேன். ’உனக்கு தாகமே எடுக்காதா?தண்ணீர் வேண்டாமா? 'இரையை எப்படிக் கண்டடைவாய்' என்றது. 'எல்லாம் கருஞ்சிவப்பு பறவை தரும்' என்றேன். 'இப்போ அது எங்கே'. 'என்னை அநாதரவாக விட்டுச் சென்று விட்டது'. 'உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது' என்று கூறிய நீலப்பறவை. 'பறவையின் சுதந்திரமே அது தனித்து உணவு தேடுவதும், தன் வீட்டை தானே கட்டிக்கொள்வதும்தான். வானம் என்பது பறவையின் பயண வெளி. பறத்தலில் சுதந்திரம். அது வாழ்விடம் அல்ல.நீ தரை தொட வேண்டும். காற்றை உந்தித் தள்ளி தரையிலிருந்து வானம் தொடும் பறத்தல் சாகசமானது. அதேபோல் வானியிலிருந்து தரை தொடுவது காற்றில் மிதக்கும் பேரானந்தம். சமதளத்தில் பறப்பது பறத்தலே அல்ல' என்றது நீலச்சிறகு பறவை.

’வானம் அளவிற்கு பூமியும் அழகு. பூமியின் அழகைப் பார்க்கவேண்டுமென்றால், நீ தரை தொட வேண்டும்.தரை தொடாத பறத்தல் முற்றுப் புள்ளியற்றது. தரை தொடாத வான் பறத்தலில் நீ பார்த்தது என்ன.நீ அடைந்தது என்ன.’.நீலப் பறவை இந்த கேள்விகளை என் முன் வைத்தது.‘வெண் மேகம் பார்த்திருக்கிறேன், மழை பார்த்திருக்கிறேன். சிலபொழுது வானவில்,நீல ஆகாயம்,எப்போதாவது செவ்வானம்,கரும் இருள்.அதிகாலை மஞ்சள் வானம்.’.நான் சொல்லச் சொல்ல நீலப் பறவை சிரித்தது. ‘சுருக்கமாகச் சொல் வானும், வான் சார்ந்தவையும் பார்த்திருக்கிறாய்.மழை அறிந்த நீ, மழை தரும் மண் வாசம் அறிந்திருக்கிறாயா?மழை தரும் பசுமை அறிந்திருக்கிறாயா?மழை தரும் பூக்கள் அதன் வாசம்.காட்டருவி,அதன் சங்கீத இசை' நீலப் பறவை நான் அறியா பல அழகியலை எனக்கு சொல்லிக்கொண்டிருந்தது. அதன் ஒவ்வொரு வர்த்தைகளுக்குள்ளும் ஒரு புன்னகை இருந்தது.நீ தரை இறங்கியாகவேண்டும் என அது கட்டளை இடவில்லை. தரை இறங்கவில்லைஎன்றால் உனக்கு வாழ்க்கை இல்லை என அச்சுறுத்தவில்லை.தரை இறங்கும்
பயத்தை போக்கியது. பூமி பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.


சிறகுகள் இருப்பது மேலே மேலே பரப்பதற்குதானே தவிர தரை இறங்குவதற்கு இல்லை என்றே நான் கற்பிக்கப் பட்டிருந்தேன்.
என் தவறான கற்பிதங்களை நீலப் பறவை எனக்கு புரிய வைத்தது.நான் நீலப் பறவையோடு தரை இறங்க எத்தனித்தேன். தரை நோக்கி நான் பறக்கும் முதல் பறத்தல். உயரப் பறத்தலும், சரிசமமாகப் பறத்தலுமே அறிந்த என் சிறகுகள் முதல் முறையாக கீழ் நோக்கி பறக்கத்துவங்கியது.

தாளப் பறத்தல் என்னுள் ஏதோ செய்தது. அடி வயிற்றில் ஒரு பயப்பந்து சுழன்றது. ஆனால் அது சுகமாக இருந்தது. என் தடுமாற்றத்தை அறிந்த நீலப் பறவை தன் வேகத்தை குறைத்து என் வேகத்திற்கு வந்து எனக்கு வழிகாட்டியது.



மிகப் பெரிய அடர்ந்த காட்டில் ஓடுகிற காட்டாற்றின் கரையில் தரை இறங்கினோம். நீலங்களும்,நீலம் சார்ந்த நிறங்களும் பழகிய.. என் விழிகளுக்கு காட்டின் பசுமை புதியதாக இருந்தது.காட்டு மரப்பூக்களின் நறுமணங்கள், மண் வாசம், நான் அறிந்திராத வித விதமான வண்ணங்கள்.தரை இறங்கிய என் கால்கள் தரை தொடவில்லை.எனக்கே எனக்கான வெளிகளில்..எனக்கே எனக்கான இசை உலகில்..என் சுதந்திரத்தின் முதல் புள்ளியில் நான் காலடி எடுத்து வைத்தது போல இருந்தது.குயிலின் பாடல், மயில்களின் நாட்டியம்,சில்வண்டுகளின் ரீங்காரம், அருவிச்சத்தம், இத்தனைக்கும் மத்தியில் என்னை தரை இறக்கிவிட்டு..'விரும்பியபடி வாழ்..உன் சுதந்திரம் உன் சிறகுக்குள் இருக்கிறது. நடக்க நினைத்தால் நட, பறக்க நினைத்தால் பற' என்றது.

நான் அதன் முன்னே என் சிறகுகளை விரித்து நின்றேன். நீலப்பறவை என்னை வினோதமாகப் பார்த்தது.'என்ன' என்றது. 'என் சிறகுகளை வெட்டிக்கொள்' என்றேன்.புரியாமல் பார்த்தது அந்த நீலப்பறவை. 'என் வாழ்வியலை இதற்கு முன் தீர்மானித்த பறவை,வளர வளர என் சிறகுகளை வெட்டிக் கொண்டே இருந்தது. இப்போது நீ எனக்கான வாழ்விடத்தை அடையாளம் காட்டி இருக்கிறாய் நீயும் என் சிறகுகளை வெட்டிக் கொள்' என்றேன். அது மௌனமாக புன்னகைத்தது. ரெக்கைகள் வெட்டப்படுவதன் வலி நானும் அறிந்திருக்கிறேன். தீராத துயரமாய் வலி தொடர்ந்த போது நான் என் சிறகுகளை காப்பாற்றிக் கொண்டேன். கூடு கட்டுவதும், உணவு தேடுவதும், விரும்பும் இடத்தில் பறப்பதும் வாய்க்கப்பெற்றிருப்பது இயற்கை பறவைகளுக்கு தந்த சுதந்திரம். இனி ஒருபோதும் யாரும் உன் சிறகுகளை வெட்ட அனுமதிக்காதே.


நாங்கள் நடந்த பாதையெங்கும் சிறகுகள் உதிர்ந்து கிடந்தன. என் சிறகுகளைப் போல் யாரோ ஒரு பறவையின் சிறகுகளை வெட்டி எரிந்திருக்கிறார்கள் என்ற அச்சம் என்னுள் எழுந்தது. 'தரையிலும் சிறகுகள் வெட்டப்படுமா' என்று அச்சத்தோடு கேட்டேன். உன் உரிமையையும், சுதந்திரத்தையும் நீ அறியாமல் இருந்தால் வான், பூமி என்று இல்லை பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் உன் சிறகுகள் வெட்டப்படலாம். ஆனால் இவை வெட்டப்பட்ட சிறகுகள் அல்ல. உதிர்ந்த சிறகுகள். சிறகுகள் உதிர்ப்பது பறவைகளின் சுதந்திரம்'எனச் சொன்னது நீலப் பறவை
.
கருஞ்சிகப்புப் பறவை அன்பை ஒரு அச்சுறுத்தலாகவே என்னிடம் காட்டியிருக்கிறது.என் சிரம் வருடி,என்னை மடியில் கிடத்தி ஒரு ஆறுதல் மொழிகளை என் செவிகளுக்குள் மாயச் சொற்களாய் ஒலிக்கச் செய்து என் மயக்கத்தினூடகவே என் சிறகுகளை வெட்டி எறிந்திருக்கிறது.சொற்களின் சூட்சுமம் அறியாத என் பேதைமை அதன் வார்த்தைகளை நம்பியிருக்கிறது. 'சிறகுதிர்த்தல் பறவையின் சுதந்திரம்'. நீலப் பறவையின் சொற்கள் என் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.விலாப்புறம் இருந்த என் வெட்டப்பட்ட சிறகுகளைப் பார்த்தேன். இந்த சிறகுகள் வளரும் வரை பூமியில் இருக்க வேண்டும். வளர்ந்த சிறகுகளை
சுதந்திரமாக உதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உன் சுதந்திர வாழ்வினை தீர்மானித்துக்கொள் என்று என்னிடமிருந்து விடைபெற்ற
நீலப் பறவையிடம் வெண்மை என்பது நிறமில்லையா? எனக் கேட்டேன்.

'எல்லா நிறங்களின் மூலமும் வெண்மைதான். வெண்மை கலப்பில்லாமல் எந்த நிறமும் உலகில் இல்லை. வெண்மை வெறும் நிறமல்ல..அது அழகின்
பொருள். சுதந்திரத்தின் முழுவடிவம். அருவி,நிலா,வெண்மேகம்,பூக்கள்,
தேவதை சிறகுகள்,எல்லாமே வெண்மைதான்' என்றது. என் சிறகுகள் வெண்மைதான் என்றேன். 'ஆம் அது தேவதையின் சிறகுகள்' என்றது நீலப் பறவை. மெல்லிய காற்று வீசியது.நீலப் பறவை தன் நீள் சிறகுகளை விரித்தது. அதன் சிறகுகளுக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் போல இருந்தது.நான் அதை நீலப் பறவையிடம் சொன்னேன். நீலப் பறவை சிரித்தது.’வாழ்கை எதற்குள்ளும் ஒளிந்து கொள்வதல்ல.அது ஏகாந்தமாய் பறப்பது. சுயமாய் இருப்பது. இரை தேடப் பழகு.. கூடு கட்டப் பழகு..பறவையாய் வாழப்பழகு’ என்று சொல்லி தன் நீல நிறச் சிறகொன்றை உதிர்த்து பறந்தது.

நான் பூமியில் என் கால்களை அழுந்தப்பதித்து நடக்கத் துவங்கினேன். கட்டளைகளுக்குக் கட்டுப்படாத என் காலடிச்சுவடுகளை எனக்கு மிகவும் பிடித்தது .நான் நீண்ட தூரம் நடந்தேன். இயற்கையின் வனப்புகள் என்னை மயக்கமூட்டின. கானகத்தின் நடுவில் இருந்த ஒரு மரத்தில் கனி பறித்தேன்.அது இதுவரை நான் ருசித்தறியாத சுவையோடிருந்தது. இதற்கு முன் இரை என்பது கருஞ்சிகப்பு பறவை அலகில் கொண்டு வரும் சுவையறியா, ரசனையற்ற இரையாவே இருந்தது. முதல் முறையாக நானே என் இறையை தேடிக் கொண்ட சந்தோசத்தில் சிறகுகளை பட படவென அடித்துக் கொண்டேன். வெட்டப்பட்ட சிறகுகள் இல்லையா? அது கொஞ்சம்தான் விரிந்தது. என் சிறகுகள் வளரும். என் ரெக்கைகளை அகல விரித்து பூமியில் என் நிழல் பட நான் ஏகாந்தமாய் பறப்பேன். இயல்பாய் சிறகு உதிர்ப்பேன். உதிர்ந்த என் வெண் சிறகுகள் புன்னகை மாறாத ஒரு குழந்தையின் விளையாட்டுப் பெட்டகத்தில் பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும். அந்தக் குழந்தையின் புன்னகை வ்ழியாக என் சுதந்திரம் வெளியெங்கும் நிரம்பி வழியும்.

(இம்மாதம் ‘தி சண்டே இந்தியன்’ இதழில் வெளிவந்த சிறுகதை)

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

நதியில்மிதக்கும் கானல்



நதியில் மிதக்கும் கானல்

விடை கொடுக்கும்போது

உன் முகத்தில் நிழல்கள் விழுவதில்லை

இ.ன்னும் நம்பிக்கைக்கு

இடமுண்டாவென திரும்பிப்

பார்க்கவே செய்கிறேன்

-மனுஷ்ய புத்திரன்

ரயில்நிலையத்தில் நிகழாமல் இருந்திருக்கலாம் அந்தப் பிரிவு. முன்பு ஒருநாள்மழைக்காலத்தில் அவன் அருகில் அமர்ந்திருந்தபோது இனிய சங்கீதத்தைப்போல தாலாட்டிய ரயிலோசை இன்று மிகப்பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இனிமேல் அவனிடத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை. வாழ்நாள் முழுதும் கூடவருவேன் என்று சொன்னவன் இப்படி ரயில்நிலையத்தில் ஒரு கைஅசைவில் நம்மிடையே உறவு

முறிந்துவிட்டது என்று சொல்வதற்காக வந்திருக்கிறான். ரயில் அவனைக் கடந்துபோகும் கணநேரத்தில் அத்தனை அன்பையும் காற்றில் விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று நினைக்கிறானா? அவ்வளவு எளிமையானதா காதல்.

எந்த வினாடியும் என் கைகளைப் பற்றிக்கொண்டு "ஒரு பிரச்சினையும் இல்லடா. எதுக்கு

நீ தேவை இல்லாம மனசைப்போட்டுக் குழப்பிக்கிற. எல்லாமே அப்படியேதான் இருக்கு"

என்று சொல்லிவிடமாட்டானா என இதயம் தவித்தது. அவனோ மிக நிதானமாக

"எத்தனை மணிக்கு டிரெயின் கிளம்பும்" என்றான். இன்னும் நம்பிக்கை மிச்சமிருந்தது.

எனக்கான அன்பு, அவன் கண்களில் எஞ்சியிருக்கிறதா என்று தீவிரமாகத் தேடத்

தொடங்கினேன். அவன் முகத்தில் இறுக்கம் கூடக்கூட அவன் முன்பு எனக்குள்

ஏற்படுத்திய அன்பெல்லாம் நலிந்து சிதைந்து உருகி ஓடியது. காதலின் வேகத்தைப்

போலவே பிரிவும் அதே அழுத்தத்தோடு அவனிடமிருந்து வெளிப்பட்டது.

"நமக்குள்ளே இப்படி ஒரு பிரிவு வேணுங்கிறதை நீ புரிஞ்சிக்கணும். இவ்வளவு

சண்டையோட நாம எப்படி வாழ்க்கையைத் தொடங்க முடியும்" என்று அவன்

பேசிக்கொண்டே போக தாங்க முடியாத அருவருப்பில் இரண்டு கைகளையும் முகத்தில்

வைத்து மூடி 'சீ' என்று சத்தமாக கத்தினேன். "இதான், இந்த மாதிரி ஆர்ப்பாட்டம்

பண்றதாலதான் இத்தனை நாளும் உன்னைப் பார்க்காம இருந்தேன். அவ்வளவுதான்,

உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி என்னைத் தேடி வந்து

அசிங்கப்படாதே''. என் பேச்சை கேட்க விரும்பாமல் உடனடியாக அந்த இடத்தைவிட்டு

நகரத் தொடங்கினான்.

அமிலம் சொட்டும் வார்த்தைகளை வீசிவிட்டு ஜனத்திரளில் ஊர்ந்து மறைந்து போனான்.

ஆடாமல் அசையாமல் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த நான் மிக

ஆக்ரோசமாக கத்தி அழத்தொடங்கினேன். என் அருகிலிருந்தவர்கள் எல்லாம்

கண்டிப்பாக என்னை நாகரீகமற்ற பெண்ணாக நினைத்திருக்கவேண்டும்.

அதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் நான் இல்லை. உணர்வுகள்

பெருக்கெடுத்து ஓடின. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வயிற்றைப் புரட்டிக்கொண்டு

வந்தது. வாந்தி எடுக்க இடம் தேடினேன். ரயில்பாதையைத் தவிர வேறெதுவும்

தட்டுப்படவில்லை. பிளாட்ஃபார்மில் தலையைப் பிடித்து உட்கார்ந்தேன்.

பத்துவினாடிகள்கூட சென்றிருக்காது. என்னைச்சுற்றி பெருங்குரல்கள். 'ஏய் வாவா' என்று

ஒரே கூச்சல். எனக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. கண்களிலிருந்து காட்சிகள்

மறையத் தொடங்கின. யாரோ என்னை வேகத்தில் பிளாட்ஃபார்முக்குள்

இழுத்துப்போட்டார்கள். நான் செல்ல வேண்டிய மதுரை எக்ஸ்பிரஸ் சத்தத்தோடு

ஊர்ந்து நின்றது. என் பக்கத்திலிருந்து "என்னாச்சுமா" என்று

கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ரயிலில் இருக்கையைத் தேடக் கிளம்பிவிட்டார்கள். தன்

நினைவு மெதுவாக திரும்பிக்கொண்டிருந்தது. தலை கனத்து வெடித்துச் சிதறுவது

போன்ற வலி ஏற்பட்டது. ரயில்நிலையத்தின் எந்த மூலையிலிருந்தாவது மீண்டும் தோன்றி

என் கைகளை பிடித்துக்கொள்ளமாட்டானா என்று மனது ஏங்கியது.

அவன் எப்படி என்னை வெறுத்து மறந்துபோக முடியும். ஆனால் அவன்

என்னைவிட்டுப் போனது நிஜம். அந்த இடத்தைவிட்டு உடனடியாக நீங்கிச்செல்ல

விரும்பினேன். கனவைப்போன்று எல்லாம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீரைத்

துடைத்துக்கொண்டேன். முற்றிலுமாக அவனை என் ஞாபகத்தில் இருந்து அகற்ற

வேண்டும். இல்லை ஓடும் ரயிலிலிருந்து குதித்துச் சாக வேண்டும். நொடிப்பொழுதில்

எனக்குள் வீம்பும் வைராக்கியமும் உருவாகின.





ராணுவவீரனைப்போல் கட்டுக்கோப்பாக உடலும் மனமும் இறுகிப்போனது. லக்கேஜை

எடுத்துக்கொண்டு என் இருக்கையில் போய் அமர்ந்தேன். நானே அறிய முடியாத

நிலையில் இருந்தது என் மனநிலை. மறுபடியும் மனம் அவனிடத்தில் சிக்கிக்கொண்டது.

இதயம் தெறித்து சிதறுவதைப்போல வலித்தது. இதையெல்லாம் அவன் உணர்ந்தால்

என்னை இப்படித் துடிக்கவிடமாட்டான். ஆனால் அவனுக்கு எப்படித்தான்

புரியவைப்பது? என்னுடைய வார்த்தைகள் அவனுக்கு விஷமாகப்பட்டது. என் வலிகள்

அவனுக்கு ஆன்ம சந்தோசத்தை கொடுத்ததோ என்னவோ?

என்னால் இருக்கையில் அமரமுடியவில்லை. எழுந்து ரயில் கதவுகளுக்குப் பக்கத்தில்

போய் நின்று கொண்டேன். கதவின் இரண்டு பக்கக் கம்பிகளையும் பிடித்துக்கொண்டு

வெளியே காற்றை தலையால் முட்டிக்கொண்டிருந்தேன். ரயில் தண்டவாளத்தில் உருண்டு

செல்லும் சத்தத்தில் என் இதயம் கதறிக்கொண்டிருந்தது. மாலைநேரக் காற்றின்

குளிர்ச்சியை முகம் உணர்வதை அனுபவிக்க இயலவில்லை. இதுவே அவன் என்னிடம்

அன்பு செலுத்தும் நாளாக இருந்திருந்தால் இந்தச் சூழல் எவ்வளவு ஏகாந்தமாக

இருந்திருக்கும். வரையறுக்க முடியாத ஆனந்தத்தில் காற்றில் மிதந்து

கொண்டிருந்திருப்பேன். ஆனால் இப்போது ரத்தம் சுண்டி சோர்ந்து கிடக்கிறேன்.

எந்தக் கணமும் ரயிலிலிருந்து குதித்து விடுவேனோ என்று நினைத்தேன். "இந்தப்பக்கமா

தள்ளி நில்லுங்க" நான் மிக மெதுவாக தலையை நிமிர்த்தி இனிமேல் வாழ்வதற்கு என்ன

இருக்கிறது என்பதைப்போல் குரல் வந்த திசையைப் பார்த்தேன். ஒரு நடுத்தர வயது

மனிதர் என் முகத்தில் ததும்பிய உணர்வுகளை நோட்டமிட்டபடி "இல்ல காத்து பலமா

வீசுது. பிடி நழுவப் போகுது. அதான் தள்ளி நில்லுங்கன்னு சொன்னேன்". புன்னகையை

நன்றியாக்கிவிட்டு கதவில் சாய்ந்து நின்றேன். என்னை யாரென்றே தெரியாத ஒருவருக்கு

நான் செத்துப்போவதில் விருப்பம் இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது என்று அவன்

சொல்லிப் போன பின்பு எப்படி நான் உயிரோடு இருப்பேன் என்று நினைத்தான். நான்

அவனிலிருந்து விலகிப் போகவேண்டும். அது என்னுடைய மரணமாக இருந்தாலும்

பரவாயில்லை என்ற நிலையில் அவன் இருக்கிறானா?

எவ்வளவு நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. ரயிலின்

கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன. டீ விற்பவர், சாப்பாடு ஆர்டர் எடுப்பவர், டிக்கெட்

பரிசோதகர், கழிப்பிடத்தை உபயோகிக்கும் பயணிகள் என்று எல்லோரும் என்னைக்

கடந்து சென்றார்கள். நான் ஏன் அங்கேயே நிற்கிறேன் என்பதில் சில பயணிகளுக்கு

சந்தேகம் வந்துவிட்டது. என்னைக் காப்பாற்றும் பொருட்டு யாராவது ஒருவர் என்னைத்

தள்ளி நில்லுங்க என்று சொல்லிப் போனார்கள். கிட்டத்தட்ட அந்த

கம்பார்ட்மெண்ட்டில் அனைவரும் தூங்கச் சென்றுவிட்டார்கள். நானும் என்

படுக்கையில் விழுந்தேன். அதற்குமுன் பல இரவுகள் நான் தூங்காமல் விழித்திருக்கிறேன்.

ஆனால் இந்த இரவைப் போன்று கொடுமையான இரவை அனுபவித்ததில்லை.

கொடும்வாள்கள் பல சூழ்ந்து நெஞ்சைப் பிளப்பது போலிருந்தது. எங்கே இருக்கிறேன்?

என்னைச்சுற்றி என்ன நடக்கிறது? எதுவும் புரியவில்லை. நரமாமிசம் சாப்பிடும்

அரக்கர்களிடம் மாட்டிக்கொண்டதைப்போல் மனத்தில் பீதி ஏற்பட்டது. ஞாபகங்களை

இழந்துகொண்டிருந்தேன். அதுவும் ஒருவகையில் நல்லதாகத்தான் பட்டது. அவன்

பிரிவின் மரணவலி, அதில் மறக்கடிக்கப்பட்டால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும்.

ஆனால் மற்ற நினைவுகள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு அவன் மட்டுமே நினைவற்ற

நினைவில் முழுவதுமாக இருந்தான். அவன் நினைவில் அழுகிக்கொண்டிருக்கும் என்

ஆத்மாவை பிய்த்து எறிந்தால்தான் சந்தோசம் கிடைக்கும். என் உயிர் பிரிந்து நிசப்தத்தில்

முடிந்தாவது அந்த வலியை மறக்கடிக்க விரும்பினேன். தீவிரமான அன்புத் தேடலின்

உயிர்தொடும் மூர்க்கம்தான் என் காதல் என்பது அவனுக்குப் புரியாமல்போனது

சோகம்தான்.

ஒருபொட்டுக்கூட தூங்காமல் கொடைரோடு ரயில்நிலையத்தில் இறங்கிக்கொண்டேன்.

என்னுடைய சில செயல்கள் அதிசயமாகத்தான் தெரிந்தன. இத்தனை நினைவற்ற

மனநிலையில் அனிச்சையாக எப்படி சரியான நிறுத்தத்தில் இறங்கினேன் என்றே

தெரியவில்லை. மதுரையில் இருக்கும் அப்பா கொடைரோட்டுக்கு வந்து காத்திருக்கிறேன்

என்று சொன்னார். "சிரமப்பட வேண்டாம். இரண்டு நாளில் நான் கல்லூரியில்

செட்டிலானவுடன். நிதானமாக கொடைக்கானல் வாங்க" என்று சொல்லிவிட்டேன்.

அப்பா மிகவும் சந்தோசத்தில் இருப்பார். அவருக்கு பிடித்தமான கல்லூரி லெக்சரர்

வேலையில் சேரப் போகிறேன். தினப்பத்திரிகையில் நான் பார்த்தது நிருபர் வேலை.

"எம்.பில் எம்.எட் படிச்சிட்டு என்னம்மா நிலையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வேலை.

மாப்பிள்ளை பார்க்க கஷ்டமாக இருக்கிறது" என்று சொல்லிக்கொண்டே இருப்பார்

அப்பா. நான் அவனைக் காதலித்தது வீட்டுக்குத் தெரியாது. காதலிப்பது மகா குற்றமாக

கருதும் எங்கள் குடும்பத்தில் என் காதல் தோல்வி அடைந்துவிட்டது என்று

சொன்னால் எப்படி இருக்கும்? அந்த விதத்தில் கொஞ்சம் பாதுகாப்பாக

இருந்திருக்கிறேன். பள்ளி, கல்லூரி என்று மதுரையில் இருந்தவரை காதலைப் பற்றி

யோசிக்க நேரமில்லை. காதலிக்காமல் இருப்பது பெரும் கௌரவமாக நினைத்துப்

பெருமிதப்பட்டுக்கொண்டிருந்தேன். பாவம் ஒருத்தன் ரொம்ப காலமாக என் பின்னால்

சுற்றிக்கொண்டிருந்தான். அவன் முகத்தைக்கூட சரியாகப் பார்க்காமல் அவனை

அவமதித்திருந்தேன். பலமுறை யோசித்தும் இன்றும் அவன் முகம் ஞாபகத்துக்கு வர

மறுக்கிறது. அவன் விட்ட சாபமோ அல்லது அவனை அலையவிட்ட பாவமோ

தெரியவில்லை இப்படித் துன்பவலையில் சிக்கித் தள்ளாடுகிறேன்.

நான் பார்த்துக்கொண்டிருந்த நிருபர் வேலையை விட்டுவிட்டேன் சென்னையில்

இருந்தால் கண்டிப்பாக அவன் நினைவில் செத்துவிடுவேன். ரொம்ப நாளாக அப்பா

வற்புறுத்திக்கொண்டிருந்ததை இப்போது என்னைக் காப்பாற்றிக்கொள்ள

பயன்படுத்திக்கொண்டேன். கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் தற்காலிக லெக்சரர்

வேலை கிடைத்ததும் மலைநகரத்திற்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். லேசாக

விடியத் தொடங்கியது. கொடைக்கானல் செல்லும் பஸ்ஸுக்காக காத்திருந்தேன்.

லக்கேஜை இழுத்துக்கொண்டு ரோட்டில் இருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டேன்.

கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை மாறத் தொடங்கியது. அந்த இடம் மிக குளிர்ச்சியாக

இருந்தது. முகத்தில் அடித்த ஜில்காற்று இதமாக இருந்தது. டீக்கடை பெஞ்ச், பேப்பர்

படித்தபடி டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆண்கள், கவனமாக டீ

போட்டுக்கொண்டிருப்பவர் எல்லாம் என் வாழ்வில் நிதானத்தை

அளித்துக்கொண்டிருந்தார்கள். நான் இப்போது காணும் ஒவ்வொரு காட்சியும் எனக்கு

முக்கியமாகப்பட்டது. என்னைக் காப்பாற்றும் காரணியாகவே எல்லாவற்றையும்

நினைத்தேன். தனித்துவிடப்பட்ட நான், மிகச் சுதந்திரமானவளாக உணர்ந்தேன். என்னை

வெறுக்கும் ஒருவனை மறக்க வேண்டும். என் முன் இருந்த சவால் அது.

டீயை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தேன். சூடாக டீ உள்ளே இறங்கியது. அப்போது ஒரு

பஸ் டீக்கடை அருகில் வந்து நின்றது. பஸ்ஸிலிருந்தவர்களை கவனமாகப் பார்க்க

ஆரம்பித்தேன். இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்காத பெண் ஜன்னலில் தலைசாய்த்து

படுத்திருந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் பயணத்தின் களைப்பு இல்லை.

கவலைகளை மறக்கடிக்கும் பாவனை இருந்தது, அவளது தூக்கத்தில். அப்பாவின் விரல்

பிடித்து பஸ்ஸிலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்த்து மறைந்து நின்று ஒன்னுக்கடித்த

சிறுவன் என்னுள் லேசான புன்னகையை வரவழைத்தான். சிறு முறுவலிப்புடன் கேசம்

ஒதுக்கி மணி பார்த்துவிட்டு, ஜன்னல்வழி வெளியுலகம் பார்த்த சுடிதார்பெண் அந்தக்

காலையில் மிக அற்புதமான பனிஓவியம் போலிருந்தாள். ஒவ்வொருவராக டீக்கடையை

ஆக்ரமித்தார்கள். சுடுதண்ணீர் வாங்கி பொறுப்பாக பால்பாட்டிலை கழுவி பின்

கடையில் பால் வாங்கி பாட்டிலை மனைவியிடம் கொடுத்த மனிதன் உலகின் மிக

உன்னதமாகப்பட்டார் எனக்கு. அழுதுகொண்டிருந்த குழந்தை அழுகை அடக்கி,

ஓரேமூச்சில் பாலைக் குடித்துவிடும் நோக்கில், பாட்டிலின் நிப்பிளை வேக வேகமாக

உறிஞ்சியது. அவனில்லாத உலகத்தை ஒருநாளில் அழகானதாக மாற்றிவிட முடியாதுதான்.

வாழ்க்கை அழகானதாக இல்லாவிட்டாலும் மிக மெதுவாக நகர்ந்து ஒருநாள்

வலியற்றதாக மாறலாம் என்பதை அந்தக் காலைக் காட்சிகள் உணர்த்தின.

கொடைக்கானல் பஸ் முழுமையாக நிறைந்திருக்கவில்லை. சந்தேகமே இல்லை

ஜன்னலோர சீட்டில்தான் அமர்ந்தேன். மலைப்பாதையில் பஸ் உயர உயர உடல் குளிரத்

தொடங்கியது. வெயிலும் பனியும் கலந்து வெளிர்மஞ்சள் நிறத்தில் இருந்தது வெளி. நான்

இதற்கு முன் வானத்தை அத்தனை அழகாகப் பார்த்ததில்லை. சூரியனால்

ஒளிரத்தொடங்கிய வானத்தில் நீலநிறம் பிரிந்து வெண்மையும் மஞ்சளும்

கூடிக்கொண்டிருந்தது. கொட்டும் பனி, ஒளிரும் வெளிச்சம், தூரத்தில் பள்ளத்தாக்கில்

மேய்ந்துகொண்டிருக்கும் காட்டு மான்கள், உணவுகளை தேடிப்பிடித்துச் சாப்பிடும்

குரங்குகள் அத்தனையும் அழகு. காட்சிப் பிழையாக அவன் முகம் எங்கும் இல்லை.

கொட்டும் அழகாக இருந்த இயற்கை எழிலில் மூழ்கிப் போனேன்.

மனம் சீராகத்தான் இருந்தது பஸ்ஸில் காதல் பாடல்கள் ஒலிபரப்பாகும்வரை. 'காதலின்

தீபம் ஒன்று', 'வசந்தகால கோலங்கள் வானில் மிதந்த கோடுகள்', 'வண்ணம்கொண்ட

வெண்ணிலவே', 'நீ பாதி நான் பாதி' அத்தனையும் காதல் பாடல்கள். மனம் தறிகெட்டு

ஓடி அவனில் வந்து நின்றது. ஓடிப்போய் பாட்டை அணைத்துவிட நினைத்தேன்.

கண்களிலிருந்து கண்ணீர் தானாக வழிந்துகொண்டிருந்தது. சிறு வயதிலிருந்தே

இளையராஜாவின் பாடல்கள் எனக்குள் மிகப்பெரும் காதல் உணர்வை

ஏற்படுத்தியிருந்தன. ஒருநாளாவது இளையராஜாவின் இசையைக் கேட்காமல் இருந்தது

இல்லை. வாழ்வின் அன்றாட செயலைப்போல அவரின் பாடல்கள் காற்றில் கலந்து

என்னுள் பெருமிதமான, மென்மையான காதலை உணர்த்தியது. என் மனத்தில் இருந்த

அத்தனை அழகான இசை காதலுக்கு கௌரவம் செய்யும் பொருட்டே சராசரி ரசனை

உள்ள எவனையும் நான் அனுமதிக்கவில்லை. அவனைப் பார்த்தபோது அவன்

நானாக இருந்தான். அவனும் என்னைப்போல உணர்வோடு கலந்த இசையின் காதலியைத்

தேடிக்கொண்டிருந்தான். எனது இருபத்திரெண்டாவது வயதில் அவனைக்

கண்டுபிடித்தேன். உணர்வுகள், ரசனைகள், விருப்பங்கள் ஒன்றிப்போயின. என்னுள்

இருந்த இசை அவனைப் பார்த்ததும் பொங்கியது. மனம் சிறகடித்து பறந்தது.

ஒரு பெரிய கம்பெனியில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருந்த அவன் எங்கள் பத்திரிக்கை

அலுவலகத்திற்கு சில தமிழ் சாப்ட்வேர்களை அறிமுகப்படுத்த வந்திருந்தான். கட்டுரை

எழுதும்போது என் பக்கத்தில் அமர்ந்து சாப்ட்வேர்களை எப்படி பயன்படுத்தவேண்டும்

என்று சொல்லிக்கொண்டிருந்தான். எப்போதும் சன்னமான குரலில் இளையராஜாவின்

பாடல்களை முμமுμத்துக்கொண்டிருந்த அவன் என்னை ஈர்த்ததில் வியப்பில்லை.

அவன் வந்து இரண்டு நாட்கள்தான் ஆகியிருந்தன. வெகுநாட்கள் பழகியவனைப்போல்

நெருக்கமாகப் பேசினான்.பெயர் சொல்லி அழைத்தான். மழை பெய்துகொண்டிருந்த நாளில் "டீ சாப்பிட

வர்றீங்களா" என்று கேட்டான். அவன் பார்வை மிகக் கூர்மையாக இருந்தது. என்னை

வீழ்த்தும் பார்வை சந்தேகமே இல்லை. இதற்குமுன் நான் யாருடைய கண்களையும்

இப்படி நேருக்கு நேர் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதில்லை. தவறி அவன்

கண்களைச் சந்திக்க நேரிட்டால் சிரிப்பும் வெட்கமும் காதலுமாய் இருந்தது என்

பார்வை. நானும் அவனை நேர்கொண்டு பார்க்க முயன்றேன். மஞ்சள் பூக்கள் உதிர்ந்து

கிடக்கும் டீக்கடை கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே அவன் கைகளை

பிடித்துக்கொள்வேனோ என்று பயமாக இருந்தது. அவனைப் பார்க்கும் ஒவ்வொரு

கணமும் இதயம் மெல்லியதாக அதிர்ந்தது. அவன் "சிகரெட் பிடிக்கவா" என்று

கேட்டான். "சரி" என்று தலையாட்டினேன். டீயை உறிஞ்சியபடி அவன் புகைப்பதை

ஓரக்கண்ணால் பார்த்தேன். அவன் புகைபிடிக்கும் விதம் மிக அழகாக இருந்தது. அவன்

ஊதிய புகை மழைத்தூறலோடு சேர்ந்து காற்றில் ஓர் ஓவியத்தைப்போல மிதந்தது.

மரங்கள் அடர்ந்த எங்கள் அலுவலகத் தெருவில் நாங்கள் மட்டுமே

தனித்துவிடப்பட்டதுபோல் ஒரே நேர்கோட்டில் இணையாக நடந்து சென்றோம்.

இனிமையான குரலில் பாடிய பறவைகள் எங்கள் தலைக்கு மேலே பறந்து சென்று

கூட்டில் அடைந்தன. இருவருமே ஒரே உணர்வில் கண்களை நேர்கொண்டோம். "நான்

உங்களை லவ் பண்றேனு நினைக்கிறேன்" என்றான். அகமகிழ்ந்து போனேன். அவனிடம்

எதையும் காட்டிக்கொள்ளாமல் "இரண்டு நாளில் காதலா? காமெடி பண்ணாதீங்க"

என்றேன் பொய்யாக. "எனக்கு இரண்டு நாள். உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப

சொல்லுங்க. வெயிட் பண்றேன். அதுவரைக்கும் ஃப்ரண்ட் மாதிரி பேசுங்க"

நான் எதையும் உடனடியாகச் சொல்லவில்லை. ஆனால் அவனுடன் விருப்பத்தோடு

பேசிக்கொண்டிருந்தேன். ஒரு வாரத்தில் எங்கள் ஆபிஸ் புராஜெக்டை முடித்துக்கொண்டு

போய்விட்டான்.

அதன்பின் அவன் இல்லாத வெறுமையை உணரத் தொடங்கினேன்.

அவன் என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தான். என் அலுவலகத் தெருவில்

எனக்காக காத்திருந்து என்னை பைக்கில் அழைத்துச் சென்று விடுதியில் விட்டான். நான்

மறுப்பேதும் சொல்லாமல் இசைந்தேன். பில் பற்றி கவலைப்படாமல் ஃபோனில்

பேசிக்கொண்டிருந்தான். "நானும் உன்னைக் காதலிக்கிறேன்" என்று அவனிடம்

நேரடியாக சொல்லாமலே ஒன்றிரண்டு மாதங்களில் நாங்கள் காதலர்கள்

போலாகிவிட்டோம். எனக்கான காத்திருப்பு, அலுவலக வேலை இரண்டையுமே சரியாகச்

செய்துகொண்டிருந்தான். அவன் விழிகள் எப்போதும் சுறுசுறுப்புடன் பரபரத்தபடி

இருக்கும். என் நினைவில் இருக்கும் அவன் முகம் எப்போதும் புன்னகைத்தபடி இருக்கும்.

பொங்கல் விடுமுறைக்கு என்னுடைய ஊருக்கு கிளம்புகிறேன். ஆறுமணிக்கு டிரெயின்

என்று சொல்லியிருந்தேன். அவனை "வழியனுப்பி வைக்க வா" என்று வெளிப்படையாக

அழைக்கவில்லை. அவனாக வரவேண்டும் என்று நினைத்தேன். ஐந்து மணியிலிருந்து

ரயில்நிலையத்தில் காத்திருந்தேன். அவனிடமிருந்து ஒரு ஃபோன்கூட வரவில்லை.

மனத்தில் கவலை பரவியது. ஒரு ஃபோன் பண்ணி வரவில்லை என்று

சொல்லியிருக்கலாம். குறைந்த பட்சம் வேலை இருக்கிறது என்றாவது

தெரியப்படுத்தியிருக்கலாம். அவன் மனத்தில் காதலும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும்

இல்லை. எரிச்சலும் கண்ணீருமாய் இருந்த எனக்கு ரயில் சத்தமும் பயணிகளிகளின்

சத்தமும் வாதையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. எல்லாச்சத்தங்களும் பயத்தை மட்டுமே

கிளப்பின. இப்படியான மனநிலையில் ரயில்நிலையம் ஏன் ஒரு பயங்கரமான

உலகத்தைப்போல் காட்சியளிக்கிறது? அவனிடமிருந்து ஃபோன் வந்தது. வந்துவிட்டான்

என்று துள்ளலுடன் பேசினேன். "சாரி எனக்கு முக்கியமான புராஜெக்ட் வேலை.

வரமுடியல நீ பத்திரமா போய்ட்டுவா. நான் அப்புறமா பேசுறேன்" என்று சொல்லி

ஃபோனை வைத்துவிட்டான். கவலை மனத்தை வாட்டியது.

டிராலி உருண்டோடும் சத்தத்தை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தபோது அதன்

பின்னாலிருந்து அவன் வந்துகொண்டிருந்தான். மனத்தில் அரும்பிய சந்தோசத்தை

வெளியே காட்டாமல் அவனைப் பார்த்தேன். "என்ன கோபமா?" என்று கேட்டான்.

கண்களில் ஈரம் படர அமைதியாகச் சிரித்தேன். பின் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம்.

அவன் வந்ததும் பயம் உண்டாக்கிய எல்லாச் சத்தங்களும் இசையாக மாறிவிட்டன. ரயில்

நிலையம் முழுக்க அழகு நிரம்பி வழிந்தது. ரயில் புறப்படும் நேரம் வந்துவிட்டது.

அப்போதுதான் கவனித்தேன் அவனிடமும் ஒரு பை. "என்ன" என்றேன். "சும்மா"

என்றான். சரி என்று ரயிலில் ஏறும் அவசரத்தோடு எழுந்தேன். அவன் "இரு நான் கோச்

நம்பர் பார்க்கிறேன்" என்றான். பின் கம்பார்ட்மென்டைப் பார்த்து ஏறினான். "ஏய் இது

இல்ல" என்றேன். "சும்மா இரு எனக்கு தெரியும்" என்றவன் என் பேக்கை

வாங்கிக்கொண்டு ஒரு இருக்கையில் உட்கார வைத்தான் அவனும் என்னோடு உட்கார்ந்து

கொண்டான். எங்கள் இருவருக்குமான வேறொரு டிக்கெட்டை எடுத்திருந்தான். என்

டிக்கெட்டை கிழித்து காற்றில் பறக்கவிட்டான். "ஏண்டா இப்படி பண்ணின" என்று

கோபத்துடனும் சந்தோசத்துடனும் அவன் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.

வழிநெடுக எங்கள் வார்த்தைகளில் காதல் வீரியம் கூடியது. யாராலும் பிரிக்க முடியாத

காதல் நிலையை அடைந்தோம். மதுரையில் இறங்கியதும் மீண்டும் சென்னை திரும்பி

விட்டான்.

அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவன்மேல் எனக்கு மிகப்பெரும் ப்ரியம்

ஏற்பட்டதும் அவன் வேறு நண்பர்களிடம் பேசினால் சண்டையிடத் தொடங்கினேன்.

அவன் முழுமையாக எனக்கானவன் என்பதில் உறுதியாக இருந்தேன். நான்

உள்ளொடுங்கிய மனுசி. எனக்கான நெருக்கமான மனிதர்கள் மிகக்குறைவு. ஆனால் அந்த

மனிதர்களிடம் அத்தனை அன்பையும் கொட்டி வைத்திருந்தேன். அவனிடம்

சண்டையிட்ட ஒரு நாளில் சொல்லிக்கொள்ளாமால் பஸ்ஸில் ஊருக்குக் கிளம்பினேன்.

கடைசியில் மனசு கேட்காமல் பஸ் கிளம்புவதற்கு முன்பாக "ஊருக்கு கிளம்புகிறேன்"

என்று சொன்னேன். எந்த டிராவல்ஸ் என்பதை விவரமாகக் கேட்டுக்கொண்டான்.

கண்டிப்பாக அவன் வருவான் என்று தெரியும் அதற்குள் பஸ் கிளம்பிவிட்டது. இரண்டு

நிமிடத்தில் அவனிடமிருந்து ஃபோன். பஸ் எந்த இடத்தில் இருக்கு? பஸ்ஸில் நான்

உட்கார்ந்திருக்கும் இடம் எது என்று தெரிந்து கொண்டான். பஸ் நெரிசலில் நின்று

கொண்டிருந்தது. புலி மாதிரி படுவேகத்தில் என் ஜன்னலோர சீட்டுக்கு பக்கத்தில் வந்து

நின்றான். அவன் பறந்துதான் வந்திருக்க வேண்டும். பிஸ்கெட், பழங்கள் உள்ள ஒரு

பையை என்னிடம் தூக்கிப்போட்டான். பஸ் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. "சரி நீ

போ. நான் ஃபோனில் பேசுறேன்" என்றேன். அவன் அதை காதில் வாங்காமல் பஸ்

பின்னாடியே வந்துகொண்டிருந்தான். ''போடா போடா'' என்று கத்தினேன். பஸ்

நெடுஞ்சாலையில் விரையத்தொடங்கியது. காற்று வேகத்தில் தொடர்ந்து பைக்கில்

வந்தான். எனக்கு பதற்றம் கூடியது. செல்போனை எடுத்து அவனிடம் பேசினேன்.

திரும்பிப் "போ போ" என்று கெஞ்சினேன். "நீ என்கிட்ட சொல்லாம போனேலே. நான்

மதுரை வரைக்கும் உன் பின்னாடியே வர்றேன்" என்றான். மதுரவாயல் நெடுஞ்சாலையில்

அடுத்தடுத்து இரண்டு பைக் ஆக்ஸிடெண்ட்.. அவனிடம் "போ" என்று சொல்லி

போனில் கெஞ்சி கத்தி அழுதேன். வண்டி ஓட்டியபடி அவன் பேசிக்கொண்டிருந்தான்

எனக்கு பயத்தில் உயிர் கலங்கியது. கடைசியாக மிகப்பெரும் அழுகையோடு போனை

வைத்துவிட்டேன். அவன் செங்கல்பட்டு நெடுஞ்சாலைவரை வந்தான். பஸ் சிட்டாக

பறந்தது. சிறிது நேரத்தில் அவனிடமிருந்து ஃபோன். "சரி நான் போகிறேன். இன்னொரு

முறை கோபித்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்யக்கூடாது" என்றான். பயம் நீங்கி

ஆசுவாசம் அடைந்தேன். அவனின் தீவிரமான அன்பு மனத்தை உருக்கியது. உயிரை

பணயம் வைத்து அன்று என்னோடு அவன் பயணம் செய்தான்.

நானும் அவனும் நினைத்தாலும்கூட எங்கள் காதலைப் பிரிக்க முடியாது என்று நினைத்தேன்.

காதல் வலிமையானது. அன்பின் வற்றாத ஊற்று என்று நினைத்தேன்.

எல்லாம் அவன்ஒரு மாதம் புராஜெக்ட் விசயமாக பெங்களூர் செல்லும்வரை. எனக்கும் அலுவலக

நெருக்கடி. பாய்ந்து பாய்ந்து கட்டுரைகளைத் தயார்செய்யும் நிலைமை ஆகிவிட்டது.

செய்தி சேகரிப்பில் படுபிஸியாகிவிட்டேன். அவனை உடனடியாகத் திருமணம் செய்ய

வேண்டும் என்றால் பணிநிரந்தரம் அடையவேண்டும். அதற்காகத்தான் என் வேலை

பளுவைக் கூட்டிக்கொண்டு கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைத்தேன்.

அவன் என்னுடன் பலமுறை பேச முயலும் போதெல்லாம் ஒன்றிரண்டு வார்த்தை

பேசிவிட்டு வேலை இருக்கிறது என்று சொல்லி ஃபோனைத் துண்டித்தேன். அதை அவன்

புரிந்துகொள்வான் என்றே நினைத்தேன். இதன் தொடர்பாக ஃபோனிலேலேயே

இருவரும் சண்டையிடத் தொடங்கினோம். ஏன் இப்படி புரிந்து கொள்ள மறுக்கிறான்

என்று எனக்கு கோபமாக வந்தது. நான் ஒதுக்குவதாக அவனுக்குப் பட்டது. அவன்

கோபத்தின் வீரியத்தையெல்லாம் அப்போதுதான் அறிந்தேன். வார்த்தைகள் தடித்து,

எல்லோரிடமும் சிரித்து வழிகிறேன். அவனை மட்டும் ஒதுக்கிறேன் என்றான். கெட்ட

வார்த்தைகள் எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். எனக்கும் அவனுக்குமாக நான் கட்டி

வைத்திருந்த வீடு எரிந்து சாம்பலாகியது. எவ்வளவு சண்டையிட்டும் எங்களின் அன்பு

உடைந்து போகும் என்று நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை.

அவன் புராஜெக்ட் முடித்து வந்ததும் ஹோட்டலில் சந்தித்து கொண்டோம். பிரிவும்

சண்டையும் புதிதாக அன்பு செலுத்துபவர்களைப்போல் கொஞ்சம் தயக்கத்தைக்

கொடுத்து. சண்டையை மறந்து ரொமான்ஸோடு அமர்ந்திருந்தேன். இருவரும்

செல்போன்களை சாப்பாட்டு மேஜையில் வைத்திருந்தோம். இந்தத் தடவை அவனுக்கு

ஒரு சில குறுஞ்செய்திகளைத்தான் அனுப்பியிருந்தேன். அதைப் பார்க்க அவன் ஃபோனை

எடுத்தேன். அதை எதிர்பார்க்காத அவன் "ஃபோனை குடு" என்று என் முன்னால்

வந்தான். நான் தரமறுத்து பின்னால் போனேன். ஹோட்டலில் கூட்டம் அதிகமாக

இருந்தது. தலையைப் பிடித்து உட்கார்ந்தான். "வேணுமின்னா என் ஃபோனை பாரு"

என்று என் ஃபோனை அவன்பக்கம் தள்ளினேன். அவன் நிமிர்ந்தே பார்க்காமல்

ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தான். அவன் குறுஞ்செய்தியை திறந்து படிக்க படிக்க

என் இதயம் பதறியது. ஒரு நம்பரிலிருந்து இவன் ஃபோனுக்கு "சாப்பிட்டியாடா,

தூங்கினியாடா", பதிலுக்கு "கிஸ் மி டி. உன் ஃபோட்டோவை நெட்டில் அனுப்பி வை"

இப்படி இன்னும் ஏ ஜோக்ஸ் என்று நிரம்பிக் கிடந்தது. பத்ரகாளியைப்போல் என்

விழிகள் பிதுங்கியது. ரத்தம் கொதித்தது. அவன் ரொம்ப சாதாரணமாக அவன்

ஃபோனை பிடுங்கிக்கொண்டு என் ஃபோனை என் பக்கம் தள்ளினான். "நீ ரொம்ப

விவரமானவ உன் பாய்ஃப்ரண்ட்ஸ் அனுப்பினதெல்லாம் தெளிவா டெலிட்

பண்ணியிருப்ப". அருவருப்பாக உடல் குறுகி நடுங்கியது. அங்கிருந்து எழுந்து

கிட்டத்தட்ட ஓடினேன் என்றுதான் சொல்ல வேண்டும். பில்லை செட்டில் பண்ணிவிட்டு

பின்னாடியே வந்து என்னை வழிமறித்தான். "அதெல்லாம் என்னோடது இல்லடா. என்

ரூம் மேட் ஒருத்தனுக்கு ரோமிங் இல்ல. அவன்தான் இந்தப் ஃபோனை பயன்படுத்தினான்"

என்று சமாதானம் செய்தான். நான் எதையும் காதில் வாங்காமல் விடுதிக்குப்

பறந்துவிட்டேன். எனக்கு ஃபோன் செய்து கொண்டே இருந்தான். நான் ஃபோனை

அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டேன்.

அவன் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்று லேசாக சமாதானம் அடைந்தேன்.

ஃபோனை உயிர்ப்பிக்கச் செய்ததும் பல குறுஞ்செய்திகள். "சத்தியமாக அது நான்

இல்லை. அந்த நண்பனை பேச வைக்கிறேன்" என்றான். மனம் இறங்கி சிறிது ஊடலோடு

அவனோடு பேசத்தொடங்கினேன். ஆனால் என் மனம் அவனிடம் மிகப்பெரும் காதலை

வைத்திருந்தது. என் தீவிரம் அவன் சுதந்திரத்தைப் பறிப்பதாக நினைத்தான். அவன்

என்னைத் தவிர்க்கத் தொடங்கினான். அவன் எனக்காக காத்திருந்த பொழுதெல்லாம்

திரும்பத் தொடங்கின. நான் அவனுக்காகப் பலமுறை அவன் அலுவலக வாசலில்

காத்திருந்தும் வேலை இருக்கிறது என்று சொல்லி என்னைப் பார்க்க மறுத்தான்.

அப்படிப் பார்த்து, பேசிய கணங்களெல்லாம் சண்டை. அவன் பலமுறை பேசியும் பிரிவை

பற்றி மட்டும் பேசவில்லை. இப்படியே சண்டையிட்டுக்கொண்டிருந்தால் இருவரும்

வேலையில் கவனம் சிதறிவிடுவோம் என்று இருவருக்கும் தெரிந்தது. "என்னை

வேணான்னா வேணான்னு சொல்லுடா. என்னைச் சிதைக்காதே" என்று அவனிடம்

பலமுறை கேட்டும் பிரிவைச் சொல்லாமல் மழுப்பலாகவே பதில்

சொல்லிக்கொண்டிருந்தான். நானாக அவனைப் பிரிந்தால் எந்தக் குற்றஉணர்வும்

இல்லாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்திருக்கலாம். கடைசியாக இந்த ரயில்நிலையச்

சந்திப்பில் என் குரல்வளையை அறுத்துச் சென்றுவிட்டான்.

பஸ்ஸில் பாடல்கள் அடங்கியது. சிறுசிறு நிறுத்தத்தில் மக்கள் இறங்கத்

தொடங்கினார்கள். தூக்கம் இல்லாத கண்கள் தானாகச் சோர்வில் சொருகியது.

கடைசியாக அவனுக்கான கவிதை வரிகள் மனத்தில் தோன்றின.

மணல் காற்று வீசும்

நெடும் பாலை நிலத்தில்..

ஆதி ஓவியங்கள் சூழ

சிங்கம் வாழ்குகையில்

இருண்மையில் கிடக்கின்றேன்..

பாறையிடுக்கில் கசியும் ஒளி

ஞாபகம் கிளர்த்துகிறது

மண்வாசத்தோடு

உன் நினைவும் சிரம் அறுக்கிறது

ஆசைகள் இறுகிக் கடக்கும் முன்

நீ வந்தடைவாய் எப்படியும்

ஒரு மரணமுத்தத்தோடு.

.